
திருவள்ளூர், செப். 9: பள்ளிக் கல்வி துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இதனை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து அறிக்கையாக பெறப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 3,123 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 407 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் 400 மாணவர்களுக்கு மேல் இருக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் நிலை – 1 பதவியில் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 183 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை -1 பதவியில் ஆசிரியர்கள் இல்லை.
ஆனால் 400க்கும் குறைவான மாணவர்கள் உள்ள 163 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர். எனவே கூடுதலாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய இடமாறுதல் செய்யப்படுகின்றனர். இதற்காக திருவள்ளூர் மாவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம் திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 39 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் பணிகளுக்கான கலந்தாய்வு கூட்டத்திற்கு 72 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
மற்ற மாவட்டங்களில் அதிக காலிப்பணியிடங்கள் இருக்கும் போது திருவள்ளூர் மாவட்டத்தில் 39 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருப்பதால் கலந்தாய்வு கூட்டத்தை பகுதி நேர ஆசிரியர்கள் புறக்கணித்துவிட்டு கிளம்பி சென்றனர். இதனை அடுத்து 147 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்து மீண்டும் அவர்களை வரவைத்துள்ளனர். இந்நிலையில் மாலை 5 மணி அளவில் மீண்டும் ஆசிரியர்கள் அனைவரும் வருகை தந்த நிலையில் 47 காலியிடங்கள் மட்டுமே இருப்பதாக கூறி ஏகாட்டூர், திருவூர் பள்ளிக்கு மட்டும் 8 மணியளவில் பணியிடத்தை ஒதுக்கீடு செய்துள்ளனர்.
மற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யாததால் ஆத்திரமடைந்த பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளியிலேயே தங்கி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நேற்று காலை கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி தெரிவித்தார். எனினும் நேற்று நடைபெறவில்லை. ேததி குறிப்பிடாமல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
The post பகுதி நேர ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் குளறுபடி: முதன்மை கல்வி அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதம் appeared first on Dinakaran.