×

மண்டபம் அருகே வேதாளையில் ரூ.6 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 2 பேர் கைது: போலீசார் அதிரடி


ராமேஸ்வரம்: மண்டபம் அருகே வேதாளைப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திந்த ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அருகில் உள்ள வேதாளை கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு ரூ.பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த இருப்பதாக மண்டபம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமேஸ்வரம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் உமாதேவி தலைமையில் போலீசார் வேதாளை கடலோரப் பகுதியில் நேற்று இரவு தீவிர ரோந்து சென்றனர். அப்போது, வேதாளை எம்ஜிஆர் நகரில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ மெத்தபெடமைன் என்னும் போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர்.

ஐஸ் போதைப்பொருள் என அழைக்கப்படும் இதன் மதிப்பு இங்கு ரூ.6 கோடி எனவும், சர்வதேச அளவில் ரூ.20 கோடி எனவும் கூறப்படுகிறது. போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக மண்டபம் வேதாளை சூடைவலைக்குச்சி பகுதியைச் சேர்ந்த கொசு என்ற சக்திவேல் (23), நாககுமார் (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து போதைப்பொருள், தங்கக்கட்டிகளை பாதுகாப்பு முகமைகள் கைப்பற்றி வரும் நிலையில், நேற்று இரவில் மண்டபம் வேதாளைப் பகுதியில் 6 கிலோ மெத்தபெடமைன் போதைப்பொருளை போலீசார் கைப்பற்றிய சம்பவம், இப்பகுதியில் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மண்டபம் அருகே வேதாளையில் ரூ.6 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 2 பேர் கைது: போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Veddaba ,Rameswaram ,Sri Lanka ,Vedal ,
× RELATED இன்று தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை...