×

குடியிருப்போர் நல சங்கங்களுக்கு ஆணையம் அமைக்க வேண்டும்: முதல்வரிடம் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ கோரிக்கை

திருப்போரூர்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: சமூகத்தில் பல்வேறு பிரிவுகளில் பல ஆண்டுகாலமாக நீடித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து மக்கள் நலனை காத்து வரும் தங்களை மக்கள் நன்றியோடு பார்க்கின்றனர். அண்மையில் இணைய வழி விளையாட்டுகளை நெடுமுறைப்படுத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நசிமுதீன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது ஒரு சான்றாகும். சென்னை பெருநகரம் மட்டுமின்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களிலும் புதிய குடியிருப்புகள், வீட்டு மனைப்பிரிவுகள் உருவாகி கொண்டே உள்ளன.

இந்த குடியிருப்புகளில் குடியிருக்கும் அனைவருக்கும் பொதுவான இடம் அமைந்திருப்பதும், அவர்களுக்கு தேவையான சேவைகளை வழங்க குடியிருப்போர் நல சங்கங்கள் அமைத்து செயல்படுவதும் அனைவரும் அறிந்ததே. சட்ட வழிமுறைகளின்படி குடியிருப்புகளை உருவாக்கும் கட்டுமான நிறுவனங்கள் இவற்றை பராமரித்து குடியிருப்பாளர்கள் வந்தவுடன் அவற்றை அவர்களிடம் ஒப்படைத்து தொடர்ச்சியாக பராமரிக்க வேண்டும். ஆனால், பல குடியிருப்புகளில் கட்டுமான நிறுவனங்களுக்கும், அவற்றை வாங்கி வசிப்பவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

இதனால் குடியிருப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் பாதிக்கப்படுவதோடு அவற்றை கேட்டு அரசு நிர்வாகங்களை மக்கள் நாடுவதால் மாவட்ட நிர்வாகத்திற்கும் அதிக பணிச்சுமை ஏற்படுகிறது. ஆகவே, குடியிருப்போர் சங்கங்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கும், அவற்றுக்கு உரிய தீர்வு அளிப்பதற்கும் சட்ட ரீதியான ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

 

The post குடியிருப்போர் நல சங்கங்களுக்கு ஆணையம் அமைக்க வேண்டும்: முதல்வரிடம் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Resident Welfare Associations ,S.S. ,Balaji ,MLA ,Chief Minister ,Tiruporur ,S.S.Balaji ,M.K.Stalin ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...