×

போரூரில் மெட்ரோ ரயில் பணியின்போது ராட்சத துளையிடும் இயந்திரம் வீட்டின் மீது மோதி விபத்து: 3 பேர் உயிர் தப்பினர்

பூந்தமல்லி: போரூரில் நேற்றிரவு மெட்ரோ ரயில்பாதை பணிக்காக பயன்படுத்தப்படும் ராட்சத துளையிடும் இயந்திரம் ஒரு வீட்டின்மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரையில் 2ம் கட்டமாக மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகின்றன. இதற்காக போரூரில் ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக போரூர், ஆற்காடு சாலை நடுவே சில இடங்களில் தூண்கள் அமைப்பதற்காக ராட்சத இயந்திரங்கள் மூலம் துளைகள் போடும் பணியும் நடக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு போரூர், ஆற்காடு சாலையில் துளை போடும் பணிகளின்போது ஒப்பந்த ஊழியர்களின் கவனக்குறைவினால் 100 டன் எடையிலான ராட்சத துளையிடும் இயந்திரம், சுமார் 200 அடி உயரத்திலிருந்து அங்கு அஞ்சுகம் நகரில் பாக்கியநாதன் என்பவரின் வீட்டின்மீது வேகமாக மோதியது.

இவ்விபத்தில், அந்த வீட்டின் மேல்தள சுவர்கள் மற்றும் மேற்கூரை உடைந்து சிதறியது. வீட்டுக்குள் ஏதோ இடிந்து விழும் சத்தம் கேட்டு, அங்கு தூங்கிக் கொண்டிருந்த பாக்கியநாதன் மற்றும் குடும்பத்தினர் அலறியடித்து வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தனர். இதனால் அவர்கள் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் போரூர் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், மெட்ரோ ரயில் பணிக்காக துளையிட பயன்படுத்தப்படும் ராட்சத இயந்திரம் சுமார் 100 டன் எடையில் 200 அடிக்கு மேல் உயரம் கொண்டது. சாய்வான நிலையில் இருக்கும் இயந்திரத்தை செங்குத்தாக நிலைநிறுத்தி துளையிடும் பணிக்கு பயன்படுத்த வேண்டும். எனினும், அப்படி இயந்திரத்தை நிலைநிறுத்தும்போது, பின்னால் இருக்கும் வீட்டை கவனிக்காமல் ஆபரேட்டர் கவனக்குறைவாக செயல்பட்டதால் விபத்து நடைபெற்றதாக தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

The post போரூரில் மெட்ரோ ரயில் பணியின்போது ராட்சத துளையிடும் இயந்திரம் வீட்டின் மீது மோதி விபத்து: 3 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Borur ,Poontamalli ,
× RELATED சென்னையில் அடுக்குமாடி...