
திருவாரூர், செப். 8: திருவாரூர் மாவட்டத்தில் 2வது நாளாக நேற்றும் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடைகாலம் முடிந்தும், கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தென்மேற்கு பருவ மழை இல்லாததாலும், கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பதாலும் டெல்டா மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் மழையை மட்டுமே எதிர்நோக்கி உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த பயிர்களும் போதிய நீர் வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் வரையில் மிதமான மழை பெய்தது.
இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று இரவும் இதேபோல் திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக குறுவை பயிர்களுக்கு நீர் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை appeared first on Dinakaran.