×

சர்வதேச நீல வானத்திற்கான தூயகாற்று தின விழிப்புணர்வு பேரணி:  செவிலியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் பங்கேற்பு  கலெக்டர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

திருவள்ளூர், செப். 8: காற்று மாசுபாடு மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய சுற்றுச் சூழல் ஆபத்து மற்றும் உலகளவில் இழப்பு மற்றும் நோய்க்கான முக்கிய தவிர்க்கக்கூடிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலகம் முழுவதும் சுமார் 0.5 மில்லியன் அகால மரணங்கள் உள் மற்றும் வெளிப்புற காற்று மாசுபாட்டால் ஏற்படுகின்றன. மேலும் குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளில் காற்று மாசுபாடு பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிக அளவில் பாதிக்கிறது. குறிப்பாக குறைந்த வருமானம் உள்ள மக்கள் பெரும்பாலும் அதிக அளவு சுற்றுப்புற காற்று மாசுபாடு மற்றும் மர எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் மூலம் சமையல் மற்றும் வெப்பமூட்டும் உட்புற காற்று மாசுபாட்டிற்கு ஆளாகிறார்கள்.

இவற்றை கருத்தில் கொண்டு 2020ம் ஆண்டு முதல் நீல வானத்துக்கான சர்வதேச தூய்மையான காற்று தினமாக செப்டம்பர் 7ம் தேதி சர்வதேச ஐக்கிய நாடுகளால் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சர்வதேச நீலவான தூய காற்றுக்காக ஒன்றுப்படுவோம் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு\” ஏற்படுத்தும் பொருட்டு தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் செவிலியர் கல்லூரி மாணவ – மாணவிகள் மற்றும் தொழிற்சாலை பணியாளர்கள் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து திருவள்ளூர் பேரூந்து நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு மாவட்ட சுற்றுச் சூழல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமேகலை, உதவி பொறியாளர்கள் சபரிநாதன், லேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து துவக்கிவைத்தார். மேலும் பேரணியில் கலந்து கொண்ட தொழிற்சாலை பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் மஞ்சபையுடன் மரக்கன்றுகளை வழங்கினார்.

The post சர்வதேச நீல வானத்திற்கான தூயகாற்று தின விழிப்புணர்வு பேரணி:  செவிலியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் பங்கேற்பு  கலெக்டர் கொடி அசைத்து துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Clean Air Day Awareness Rally for International Blue Sky ,Thiruvallur ,Clean Air Day Awareness Rally ,International Blue Skies ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்