
செய்யாறு, செப்.8: செய்யாறில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகையை திருடிய பலே ஆசாமிகள் 3 பேர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 17 சவரன் நகைகளை அதிரடியாக பறிமுதல் செய்தனர். செய்யாறு டவுன் ஆரணி சாலையில் நேரு நகரை சேர்ந்தவர் கணேஷ் (33). இவர் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி. இவர் செய்யாறு சிப்காட் ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணேஷ் கடந்த ஜூலை 17ம் தேதி இரவு குடும்பத்துடன் வீட்டின் மேல்மாடி அறையில் படுத்து தூங்கினர். மறுநாள் அதிகாலை 4.30 மணியளவில் கலைவாணி வழக்கம்போல் வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பதற்காக கீழே இறங்கி வந்தார். அப்போது, வீட்டின் வெளிப்புற கேட் மற்றும் மெயின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே கணவர் கணேஷ் உடன் உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 55 சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ₹1.50 லட்சம் பணம் திருட்டு போயிருந்தது. இது குறித்து உடனடினயாக செய்யாறு போலீசில் கணேஷ் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 5 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அந்த காட்சியில் பதிவான காட்சிகள் வைத்து போலீசார் ஆய்வு நடத்தினர். அதில் திருட்டில் ஈடுபட்டவர்கள் பழங் குற்றவாளிகள் என தெரியவந்தது அவர்களை தேடும் பணிகள் போலீசார் ஈடுபட்டனர். அதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருவம் தாலுகா, திம்மலை கிராமத்தினை சேர்ந்த செல்வராசு(41), திருவண்ணாமலை மாவட்டம் செட்டிபட்டி கிராமத்தினை சேர்ந்த சுதாகர் (27), மணிகண்டன்.(37), ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 17 சவரன் நகைகளை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து செல்வராசு, சுதாகர், மணிகண்டன் ஆகிய மூவரையும் செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post பூட்டை உடைத்து நகையை திருடிய 3 பேர் கைது 17 சவரன் நகை பறிமுதல் செய்யாறில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் appeared first on Dinakaran.