×

வீட்டில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம்: எர்ணாகுளம் அருகே பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆலுவா மற்றும் பெரும்பாவூர் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளிகள் வசிக்கின்றனர். அவர்களில் பலரும் எந்தப் பாதுகாப்பும், வசதியும் இல்லாத குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஜூலை 28ம் தேதி ஆலுவாவில் வசித்து வரும் ஒரு வெளிமாநிலத் தொழிலாளியின் 5 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியான முகம்மது அஸ்பாக்கை போலீசார் கைது செய்தனர்.இதே ஆலுவாவில் இன்று மீண்டும் ஒரு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஆலுவா சாத்தன்புரம் பகுதியில் ஏராளமான வெளி மாநிலத் தொழிலாளிகள் அங்குள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு இங்குள்ள ஒரு வீட்டில் ஒரு 8 வயது சிறுமி தன்னுடைய தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் தாய் எழுந்து பார்த்துள்ளார். அப்போது பக்கத்தில் படுத்திருந்த மகளை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் கூக்குரலிட்டார். உடனே அந்த பகுதியினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை சுமார் 5 மணியளவில் அருகில் உள்ள வயல்வெளியில் சிறுமி அழும் குரல் கேட்டது. உடனே அந்த பகுதியினர் அங்கு சென்று பார்த்தபோது அந்த சிறுமி உடலில் ரத்தக் காயங்களுடன் நிர்வாண நிலையில் கிடந்தார். உடனடியாக அந்த சிறுமியை மீட்டு கொச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து ஆலுவா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலுவா பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

The post வீட்டில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம்: எர்ணாகுளம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ernakulam ,Thiruvananthapuram ,Aluva ,Perumbavoor ,Ernakulam district ,Kerala ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது