×

சிங்கப்பொருள் கோயில் அருகே தொடர் மழைக்காரணமாக ரெட்டிபாளையம் சர்வீஸ் சாலை மூழ்கியதால் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தம்: 20 கிராமங்கள் பாதிப்பு

செங்கல்பட்டு செப். 7: செங்கல்பட்டு அருகே ரெட்டிப்பாளையம் தரைபாலம் பணி நடந்து வருகிறது இதனால், சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. இதனிடையே தொடர் மழைக்காரணமாக சர்வீஸ் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பஸ் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் – பாலூர் இடையே ரெட்டிபாளையம் பகுதியில் தரைபாலம் இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கன மழையின்போது, ரெட்டிபாளையம் தரைபாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் பாலூர், ரெட்டிபாளையம், சாஸ்தரம்பாக்கம், வெண்பாக்கம், கரும்பாக்கம், கொளத்தூர், வெங்கடாபுரம், வடக்குபட்டு, தேவனூர், வில்லியம்பாக்கம், குருவன்மேடு என சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், இந்தப் பகுதியில் புதிதாக தரைபாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சிங்கபெருமாள்கோவில் – பாலூர் இடையிலான ரெட்டிபாளையத்தில் தரைபாலம் அமைக்கும் பணிகள் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த தரைபால பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் தண்ணீர் வரத்து அதிகமானது. இதனால், தரைபால பணிகளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், சர்வீஸ் சாலையும் தண்ணீரில் மூழ்கியது. இதனால், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியதா நிலை ஏற்பட்டது. இதனால், சிங்கபெருமாள்கோவில் – பாலூர் இடையிலான 20 கிராம மக்களின் போக்குவரத்தை நெடுஞ்சாலை அதிகாரிகள் திடீர் என தடைவித்துள்ளனர். இதனால், அவசர உதவிக்கு கூட 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை உள்ளது.

பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதால் வேலைக்கு செல்பவர்கள் 8 முதல் 10 கிலோ மீட்டர் செல்ல வேண்டிய தூரத்தை, செங்கல்பட்டு வழியாக 25 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால், கூடுதலாக 15 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின்போது, ரெட்டிபாளையம் தரைபாலம் தண்ணீரில் மூழ்கிவிடும். ஒரு மாதம் காலம் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும் மீண்டும் தரைபால பணிகள் நடைபெறும். இந்த ஆண்டு மழை பெய்தால் போக்குவரத்து பாதிக்கப்படாது என எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த, ஆண்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ரெட்டிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தரைபால பணிகள் 18 மாதங்களாக, ஆமை வேகத்தில் இந்த பகுதிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் புகார் தெரிவிக்கின்றனர். ரெட்டிபாளையம் பகுதியில் தரைபாலம் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தரைபாலத்தை கடந்து செல்கின்றனர். எனவே, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி, சிங்கபெருமாள்கோவில் – பாலூர் இடையிலான ரெட்டிபாளையம் தரைபால பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சிங்கப்பொருள் கோயில் அருகே தொடர் மழைக்காரணமாக ரெட்டிபாளையம் சர்வீஸ் சாலை மூழ்கியதால் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தம்: 20 கிராமங்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Rettipalayam ,Sinhapdhala Temple ,Chengalpattu ,Redtipalayam ,Sinhappadha temple ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு ரயில்வே மேம்பால பாதையை...