×

நிலக்கோட்டை அருகே அரசு பஸ்சை மறித்து ரகளை செய்த 2 பேர் கைது

நிலக்கோட்டை, செப். 7: நிலக்கோட்டையை அடுத்த ஒட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜெயகாந்தி (50). இவர் திண்டுக்கல் அரசு பஸ் டிப்போவில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் திண்டுக்கல்லில் இருந்து பஸ்சில் பயணிகளை ஏற்றி கொண்டு நிலக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். செங்கோட்டை பிரிவு அருகே வந்த போது திடீரென 2 வாலிபர்கள் அரசு பஸ்சை வழிமறித்து சாலையில் படுத்து கொண்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டிரைவர் ஜெயகாந்தியிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள், பொதுமக்கள் திரண்டு சத்தம் போட்டதால் 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து ஜெயகாந்தி நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்டது செங்கோட்டையை சேர்ந்த இமானுவேல் (29), அஜய்குமார் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து எஸ்ஐ அருண் பிரசாத் தலைமையிலான போலீசார் சென்று செங்கோட்டை பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர். பின்னர் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நல்லகண்ணன் முன்னிலையில் இருவரையும் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

The post நிலக்கோட்டை அருகே அரசு பஸ்சை மறித்து ரகளை செய்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Jayakanti ,Ottupatti ,Dindigul Government Bus Depot ,Dinakaran ,
× RELATED காவல் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த குற்ற வழக்கு வாகனங்கள்