×

நீலகிரியில் வாழும் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி: ‘சவால்கள் அதிகம்’ என பேச்சு

ஊட்டி: நீலகிரியில் வாழும் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக கோத்தகிரியை சேர்ந்த படுகர் இன பெண் தேர்வாகி உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகர பகுதிகளிலும், கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். பொதுப்பிரிவு பட்டியலில் உள்ள இவர்கள் தங்களை பழங்குடியின பிரிவில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக இந்த சமுதாயத்தை சேர்ந்த பலர் கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் சேர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நீலகிரி படுகர் சமுதாயத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதல் முறையாக விமானியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கோத்தகிரி நெடுகுளா குருக்கத்தியை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் மணி. இவருடைய மனைவி மீரா. இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர்தான் நீலகிரி படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக தேர்வாகியுள்ளார். இவர் பள்ளிப்படிப்பை கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் முடித்தார். இதன்பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்த இவர் சில காலம் ஐடி துறையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பின்னர் விமானியாக முடிவு செய்து பைலட் பயிற்சி முடித்து தற்போது விமானியாக சேர்ந்துள்ளார். இதற்காக தென்னாப்பிரிக்காவில் விமான பயிற்சி எடுத்து கொண்டார்.

இது குறித்து ஜெயஸ்ரீ கூறும்போது, ‘‘எங்களது சமுதாயத்தில் அண்டை மாவட்டம், மாநிலங்களுக்கே படிக்க அனுப்ப தயங்குகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மற்றொரு நாட்டுக்கு விமான பயிற்சி பெற தைரியமாக எனது பெற்றோர் என்னை அனுப்பி வைத்தனர். அதேபோல் பெண்களுக்கு இவ்வளவு செலவு தேவையா? என்று பலர் கேள்வி கேட்டபோதும் பெண் குழந்தைக்குதான் இவ்வளவு செலவு தேவை என்று என் பெற்றோர்கள் கூறுவார்கள். பொதுவாக விமானி என்றால் ஊர் சுற்றும் வேலை என்று அனைவரும் நினைப்பார்கள்.

வழக்கமான வேலைகளைவிட விமான வேலையில் சவால்கள் அதிகம் உள்ளது. 3 அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை, மனநல பரிசோதனைகள் நடைபெறும். அதில் தேர்வு பெறவில்லை என்றால் பணியை இழக்க நேரிடும். எனவே மன தைரியம் அதிகளவில் இருக்க வேண்டும். இப்படி ஒரு வேலைக்கு நான் வர காரணம் எனது ஆரம்ப கால பள்ளி படிப்பும், அங்கிருந்த ஆசிரியர்களும் முக்கிய காரணம். எங்கள் சமுதாயத்திலும், நீலகிரி மாவட்டத்திலும் முதல் பெண் விமானியாக உருவாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’’ இவ்வாறு அவர் கூறினார்.

The post நீலகிரியில் வாழும் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி: ‘சவால்கள் அதிகம்’ என பேச்சு appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Gothagiri ,Patugarh ,Patugar ,
× RELATED நீலகிரியில் போக்குகாட்டும் கோடை மழை மலை காய்கறி விவசாயம் பாதிப்பு