சென்னை: ‘சனாதனம் விவகாரத்தில், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்ல உரிமை உண்டு’ என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கூறியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நேற்று காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துகொண்டு, புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது: ‘‘ பாஜ ஆட்சி பொறுப்பேற்றபோது 414 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையை, தற்போது 1,400 ரூபாயாக உயர்த்திவிட்டு, 200 ரூபாய் குறைப்பு என கூறுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்னமும் காஸ் விலை குறைக்கவேண்டும். சனாதனம் பேச்சு விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி கூறியதற்கு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்ல உரிமை உண்டு, அதுக்கு பதிலளிக்கலாம். ஆனால் கடுமையான விமர்சனங்களை கொண்டு சகோதரத்துவத்தை குலைக்கும் வகையில் மிரட்டல் விடக்கக்கூடாது. மேலும், தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமென முதல்வரிடம், சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்’’ என்றார்.
The post சனாதனம் விவகாரத்தில் ஜனநாயக நாட்டில் யாரும் கருத்து சொல்ல உரிமை உண்டு: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பேட்டி appeared first on Dinakaran.