×

இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்


கும்மிடிப்பூண்டி: சென்னையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆந்திர இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் நேற்று மாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெற்றோர் சம்மதத்துடன் தானமாக வழங்கப்பட்டது. ஆந்திர மாநிலம், ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி (21). பி.காம் பட்டதாரி. இவர் சென்னையில் தங்கி, தனியார் கால்சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 3ம் தேதி கும்மிடிப்பூண்டி அருகே கரடிபுத்தூரில் தோழியின் சகோதரி திருமணத்தில் கீர்த்தி பங்கேற்றிருக்கிறார்.  பின்னர் தனது உறவினர் ராபர்ட் (21) என்பவருடன் ஆந்திராவில் உள்ள வீட்டுக்கு கீர்த்தி திரும்பி கொண்டிருந்தார்.

கரடிப்புத்தூர் அருகே சிறுபாலத்தில் பைக் ஏறி இறங்கும்போது, அங்கு சாலையோர பள்ளத்தில் பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இவ்விபத்தில் கீர்த்திக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரது உறவினர் ராபர்ட் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, படுகாயம் அடைந்த கீர்த்தியை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கீர்த்திக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரது பெற்றோரின் சம்மதத்துடன் கீர்த்தியின் இதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், நுரையீரல், இரண்டு கண்கள் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

The post இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Gummidipoondi ,Chennai ,Rajiv Gandhi government ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...