×

சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: பணத்தை திருப்பி கேட்ட தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு..போலீசார் விசாரணை..!!

சேலம்: சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் தாய் மற்றும் மகனுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. பல்லடம் கொலை சம்பவம் ஆறுவதற்குள் சேலத்தில் ஒரே குடும்பத்தினரை வீட்டிற்கே சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கருமந்துறை பகுதியை சேர்ந்த மணி என்ற இளைஞர் பிஎஸ்சி உயிர் வேதியியல் துறையில் பயின்றுள்ளார். மேலும் சேலம் அரசு மருத்துவமனையில் டிப்ளமோ இரண்டு ஆண்டுகள் முடித்துள்ளார்.

இதனிடையே சேலம் எட்டாப்பூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர், சேலம் காரியபட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மணியிடம் 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். வேலை வாங்கி தராததால் பணத்தை திருப்பி தரும்படி மணி கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் நேற்றிரவு மணியின் வீட்டிற்கு சென்று மணி மற்றும் அவரது தாயார் கரியாவை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். தப்பியோடிய சதீஷை மடக்கி பிடித்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கருமந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தற்போது மணி மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருமந்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: பணத்தை திருப்பி கேட்ட தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு..போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Karumanturai ,Palladam ,Dinakaran ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...