×

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி படுகொலை; ஏடிஜிபி அருண் ஸ்ரீபெரும்புதூரில் நேரில் விசாரணை: கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை விரைவு


ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று மாலை ஒரு ரவுடியை பழிக்குப் பழியாக ஒரு மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அவரது தலையை வீச்சரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி சிதைத்து படுகொலை செய்துவிட்டு காரில் தப்பி சென்றது. இதை தொடர்ந்து ஏடிஜிபி அருண் ரவுடிகள் வேட்டை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பூந்தமல்லி அருகே திருமழிசை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி எபினேசன் (32). இவர்மீது திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 3 கொலை, கொலைமுயற்சி மற்றும் வழிப்பறி கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், தண்டலம்-பேரம்பாக்கம் சாலை வழியாக நேற்று மாலை ரவுடி எபினேசன் சென்று கொண்டிருந்தார். இவர் ஆட்டோவில் மண்ணூர்-மேவளூர்குப்பம் சாலையில் சென்றபோது, மண்ணூர் அருகே காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்தது. பின்னர் அக்கும்பல், ஆட்டோவின்மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.

ஆட்டோவின்மீது நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதை பார்த்து ரவுடி எபினேசன் உயிர் பயத்தில் கீழே இறங்கி தப்பியோடத் துவங்கினார். அவரை மர்ம கும்பல் விரட்டி சென்று, ரவுடி எபினேசன்மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதனால் அவர் சாலையை விட்டு இறங்கி, வயல்வெளியில் ஓடும்போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த 6 பேர் கும்பல், ரவுடி எபினேசனை சுற்றி வளைத்து, அவரது தலையில் கத்தி மற்றும் வீச்சரிவாள் உள்பட பல்வேறு ஆயுதங்களால் சரமாரி வெட்டி சிதைத்தது. இதில், சம்பவ இடத்தில் ரவுடி எபினேசன் பரிதாபமாக பலியானார். இதை கண்டதும் கிராம மக்கள் ஓடிவருவதை பார்த்ததும், 6 பேர் கும்பல் காரில் ஏறி தப்பிச்சென்றது.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு வயல்வெளியில் இறந்து கிடந்த ரவுடி எபினேசனின் சடலத்தை கைப்பற்றி, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த 2020ம் ஆண்டு, வெள்ளவேடு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர்மீது ரவுடி எபினேசன் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்திருப்பது தெரியவந்தது.  மேலும், அதே பகுதியில் ஒரு தனியார் ஓட்டலில் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, அவர்மீது பல்வேறு வழக்குகள் பதிவாகியிருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் ரவுடி எபினேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்துள்ளார். பின்னர் திருமழிசை, பூந்தமல்லி பகுதி ரவுடிகளுடன் சேர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவரை நோட்டமிட்ட மற்றொரு கும்பல் பழிக்குப் பழியாக ரவுடி எபினேசன்மீது அவரது ஸ்டைலிலேயே நாட்டு வெடிகுண்டு வீசி, அவரது தலையை கத்தி மற்றும் வீச்சரிவாளால் சரமாரி வெட்டி சிதைத்து கொலை செய்திருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ரவுடி எபினேசனை கொன்ற 6 பேர் கொண்ட மர்ம கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரை பழிக்கு பழியாக ஏதேனும் கும்பலை சேர்ந்தவர்கள் வெட்டி படுகொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் முன்விரோத தகராறு காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை தொடர்ந்து ஏடிஜிபி அருண் ரவுடிகள் வேட்டை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஐஜி கண்ணன், எஸ்பி சுதாகர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி படுகொலை; ஏடிஜிபி அருண் ஸ்ரீபெரும்புதூரில் நேரில் விசாரணை: கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை விரைவு appeared first on Dinakaran.

Tags : Rao massacre ,Sriperumbudur ,ATGP ,Arun Sriperumbudur ,Dinakaran ,
× RELATED குரல் குளோனிங்கை பயன்படுத்தி...