×

காவல் நிலையம் முன் நர்ஸ் தீக்குளிக்க முயற்சி: போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

கோபி: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (50). இவர் சரக்கு ஆட்டோ டிரைவர். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும் ஜெயசுதா உட்பட 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். டி.பார்ம் படித்த ஜெயசுதா, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் வாட்ஸ்அப் குழுவில் ஜெயசுதா இணைந்துள்ளார். அப்போது அந்த குழுவில் கோபி அருகே உள்ள வாணிப்புத்தூரை சேர்ந்த வசந்த் என்பவரும் இருந்துள்ளார். ஒரே குழுவில் இருந்ததால், அடிக்கடி இருவரும் பேசி வந்த நிலையில் காதலித்துள்ளனர்.

இதையடுத்து இருவரும்பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். கடந்தாண்டு வசந்த், ஜெயசுதாவை விட்டு விலகியதாக கூறப்படுகிறது. இதன்பிறகு வசந்தை, ஜெயசுதா தொடர்புகொண்டபோது, அவரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதுகுறித்து ஜெயசுதா கொடுத்த புகாரின்படி, சத்தியமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் 10 மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஜெயசுதா, கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், வசந்த் மீது புகார் அளித்தார். அதற்கு போலீசார், ‘’ஏற்கனவே சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் வசந்த் மீது வழக்கு இருப்பதால் மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்ய முடியாது என்றும் சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று இது தொடர்பாக விசாரிக்குமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து மகளிர் காவல் நிலையத்தை விட்டு வெளியேறிய ஜெயசுதா, கோபி காவல் நிலையம் முன்பு சென்றதும் தான் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது காவல் நிலைய வளாகத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக ஜெயசுதாவிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிக்க முயன்றனர். போலீசாரும் வந்து ஜெயசுதா மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

The post காவல் நிலையம் முன் நர்ஸ் தீக்குளிக்க முயற்சி: போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் appeared first on Dinakaran.

Tags : Marimuthu ,Pallakaundanpalayam ,Perundurai ,Erode district ,Dinakaran ,
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...