×

புறநகர் ரயிலின் வீடியோ வைரல்; 2 ஆட்டுக்கும் டிக்கெட் வாங்கி பயணித்த பெண்: நேர்மையை கண்டு புன்னகைத்த டிடிஆர்


மும்பை: பெண் ஒருவர் தனது இரண்டு ஆட்டுக்குட்டிக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துக் கொண்டு ரயிலில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புறநகர் ரயில்களில் பயணிக்கும் பயணிகள், ரயில் பெட்டிகளில் தங்களது எல்லாவித உடைமைகளையும் எடுத்து செல்வது வாடிக்கையாக உள்ளது. வீட்டு பாத்திரங்கள், சைக்கிள், கூடைகள், வியாபார சுமைகள் என்று பலவற்றையும் எடுத்து செல்கின்றனர். அந்த வகையில் பெண் ஒருவர் தனது 2 ஆட்டுக் குட்டிகளுடன் ரயிலில் பயணம் செய்தார். அந்த பெட்டிக்குள் டிடிஆர் வந்தார். அவர் அந்தப் பெண்ணிடம், ‘இந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளும் யாருடையது?’ என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெண், ‘என்னுடையது தான்; 2 ஆட்டுக்குட்டிக்கும் சேர்த்து தான் டிக்கெட் வாங்கியுள்ளேன்’ என்று கூறி 3 பேர் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை டிடிஆரிடம் காட்டினார். அதனை பார்த்த டிடிஆர், அந்தப் பெண்ணின் நேர்மையை பார்த்து சிரித்துக் கொண்டே அங்கிருந்து கடந்து சென்றார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஊடகவாசிகள் பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், ‘இப்படிப்பட்ட பெண்கள் தான் இந்த நாட்டின் பெருமைமிக்கவர்களாக உள்ளனர். அவர்கள் எளிமையான, நேர்மையான இந்தியர்களாக உள்ளனர்.

ஆட்டுக்குட்டி என்பது அவருக்கு விலங்கு என்பது மட்டுமல்ல. அது அவருடைய குடும்பத்தின் ஒரு அங்கமாக உள்ளது. இதுபோன்ற பெண்களிடமிருந்து மக்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். பெரும் பணக்காரர்கள் நாட்டைக் கொள்ளையடித்து வெளிநாட்டுக்கு ஓடுவிடுகிறார்கள். ஆனால் ஏழைகள் தங்களது ஆடுகளுக்கும் டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணம் செய்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post புறநகர் ரயிலின் வீடியோ வைரல்; 2 ஆட்டுக்கும் டிக்கெட் வாங்கி பயணித்த பெண்: நேர்மையை கண்டு புன்னகைத்த டிடிஆர் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,DDR ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!