×

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி: திருவள்ளூர் கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்படும் என்று திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.விநாயகர் சதுர்த்தி வருகிற 18ம் தேதி நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இந்து அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் என பலரும் தங்கள் பகுதியில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகளை வைக்கும்போது சில பிரச்னைகள் ஏற்படும். அதனை முன்கூட்டியே களைவதற்காக ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் விநாயகர் சிலை வைப்பவர்களை நேரில் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

அதன்படி, பல இடங்களில் இந்த ஆண்டு விநாயகர் சிலை வைப்பவர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், புதிதாக எந்த ஒரு விநாயகர் சிலைகளையும் வைக்கக் கூடாது. கெமிக்கல் கலந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்தக் கூடாது. தமிழக அரசின் நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். விநாயகர் சிலை வைக்கும்போதும், அதனைக் கொண்டு சென்று கடலில் கரைக்கும் போதும் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை கடைபிடிக்கவேண்டும் என விநாயகர் சிலை வைப்பவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதற்கு விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுபவர்களும் காவல்துறையினருக்கு உரிய பங்களிப்பை தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது போல் மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி களிமண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.

மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தப்படலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர்நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். மேலும் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். எனவே விநாயகர் சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழல் பாதிக்காதவாறு மக்கள் கொண்டாட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி: திருவள்ளூர் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Thiruvallur ,Thiruvallur Collector ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...