×

விமானப் பணிப்பெண்ணை கொன்றது துப்புரவு தொழிலாளி: பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா?

மும்பை: அந்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த விமான பணிப்பெண் ஒருவர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில், துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டார். சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ரூபால் ஒக்ரே (24) என்பவர், ஏர் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி விமான பணிப்பெண் ஆக பணியாற்றி வந்தார். அந்தேரியில் மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்தார். அவரது வீட்டில் ரூபால் ஒக்ரே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தகவலறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜாவாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது அங்கு துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வரும் விக்ரம் அத்வால் (40) என்பவர் ரூபால் ஒக்ரே வீட்டுக்கு கடைசியாக வந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து விக்ரம் அத்வாலை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தான் கொலை செய்திருப்பது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் விக்ரம் அத்வாலுக்கும், ரூபால் ஒக்ரேக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த விக்ரம் அத்வால், அந்தப் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்தும், அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விமானப் பணிப்பெண்ணை கொன்றது துப்புரவு தொழிலாளி: பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Andheri ,
× RELATED மும்பையில் தொடரும் அதிர்ச்சி; ஆசையாக...