×

பிரக்யான் ரோவர் எடுத்த நிலவின் தரைப் பரப்பைக் காட்டும் 3D புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: பிரக்யான் ரோவர் எடுத்த நிலவின் தரைப் பரப்பைக் காட்டும் முப்பரிமாண புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ஜூலை 14ம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 23ம் தேதி சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. இதையடுத்து, லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவரும் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து ஆய்வு செய்தது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரில் உள்ள ஆய்வுக்கருவிகள் பல்வேறு ஆய்வுகளை செய்தன. அதனை அடுத்து, கடந்த 2ம் தேதியன்று, ‘ஸ்லீப் மோட்’ எனப்படும் உறக்க நிலைக்கு ரோவர் கலன் மாற்றப்பட்டது.

தற்போது நிலவில் இரவு துவங்க உள்ளது. அப்போது, அங்கு கடுங்குளிர் நிலவும். அந்த நேரத்தில் லேண்டர், ரோவர் கலன்கள் செயலிழந்து போகும். எனவே, லேண்டர் கலனின் செயல்பாடுகளை சற்று உசுப்பி விடுவதற்காக, விக்ரம் லேண்டர் கலனின் இயந்திரம் மீண்டும் உயிர் பெற்றது. இந்நிலையில் பிரக்யான் ரோவர் எடுத்த நிலவின் தரைப் பரப்பைக் காட்டும் முப்பரிமாண புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இடது மற்றும் வலது நேர்கோணத்தில் எடுக்கப்பட்ட படத்தின் ஒருங்கிணைந்த சித்திரத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. முப்பரிமாண படத்தை பார்க்க பயன்படுத்தும் லென்சை கொண்டு பார்த்தால் முப்பரிமாண அம்சத்தை பார்க்க முடியும்.

The post பிரக்யான் ரோவர் எடுத்த நிலவின் தரைப் பரப்பைக் காட்டும் 3D புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ appeared first on Dinakaran.

Tags : ISRO ,Pragyan rover ,Sriharikota ,Moon ,South Pole ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...