×

396 ஆசிரியர்களுக்கு விருது இன்று மாலை வழங்கப்படுகிறது

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 396 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கான விழா சென்னையில் இன்று மாலை நடக்கிறது. தமிழ்நாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளது. இதற்கான தகுதியுள்ள ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில் விருது பெறத் தகுதியுள்ள ஆசிரியர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட அந்த ஆசிரியர்கள் மீது புகார்கள் ஏதாவது இருக்கிறதா என்று போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகு விருதுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து இருந்தது.
இதையடுத்து, 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இன்று சென்னையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விழா சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்க உள்ளனர்.

 

The post 396 ஆசிரியர்களுக்கு விருது இன்று மாலை வழங்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,President ,Dr. ,Raadhakrishnan ,Tamil Nadu ,
× RELATED பெரம்பலூரில் போட்டியிடும் டாக்டர்...