புதுடெல்லி: குறைந்த பாசன வசதி உடைய பகுதிகளில் கற்றாழை பயிரிடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார். இதுகுறித்து ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று கூறுகையில்,‘‘ ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஹிங்கோனியாவில் இஸ்கான் மாட்டு தொழுவம் அருகே உள்ள நிலத்தில் முள் இல்லாத கற்றாழை பயிரிடப்பட்டுள்ளது. இந்த வகை கற்றாழைகளில் இருந்து உயிரி எரிபொருள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 30 சதவீத நிலங்கள் பாழடைந்த நிலங்கள் ஆகும். பாசன வசதி குறைவாக உள்ள பகுதிகளில் இது போன்ற நிலங்கள் அதிகமாக காணப்படுகிறது. இந்த வகை நிலங்களில் கற்றாழை நன்கு வளர்கின்றன. சோதனை அடிப்படையில் தற்போது ஹிங்கோனியாவில் கற்றாழை பயிரிடப்பட்டுள்ளது. இந்த வகை நிலங்களை மேம்படுத்தும் விதமாக ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை கற்றாழை பயிரிடுவதை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது. கற்றாழையில் இருந்து உயிரி எரிபொருள்,உணவு,மாட்டு தீவனம் மற்றும் உயிரி உரங்களை தயாரிக்க முடியும்’’ என்றார்.
The post குறைந்த பாசன வசதி உள்ள பகுதிகளில் கற்றாழை பயிரிட ஒன்றிய அரசு திட்டம் appeared first on Dinakaran.