
துரைப்பாக்கம்: நீலாங்கரை அருகே நண்பர்களோடு கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி, மாயமான கல்லூரி மாணவனை போலீசார் தேடி வருகின்றனர். மேடவாக்கம், நீலா நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் செபஸ்டின் (20). மேடவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை ஜேம்ஸ் செபஸ்டின் தனது நண்பர்கள் 3 பேருடன் நீலாங்கரை அடுத்த அக்கரை கடற்கரைக்குச் சென்றுள்ளார்.
அங்கு, 4 பேரும் கடலில் குளித்துள்ளனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி, ஜேம்ஸ் செபஸ்டின் மாயமானார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அலறி கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அங்கு ஓடி வந்து கடலுக்குள் இறங்கி, ஜேம்ஸ் செபஸ்டினை தேடினர். ஆனால் , கிடைக்கவில்லை. தகவலறிந்த நீலாங்கரை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாயமான ஜேம்ஸ் செபஸ்டினை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.
The post நண்பர்களோடு கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் மாயம் appeared first on Dinakaran.