×

குலசை தசரா விழா ஆபாச நடனத்தை தடுக்க நடவடிக்கை: ஐகோர்ட்டில் அரசு உறுதி

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா, மைசூருக்கு அடுத்தபடியாக பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. 12 நாள் நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று,நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர். குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் தெய்வங்கள் வேடங்களில் பக்தர்களிடம் யாசகம் பெற்று அம்மனுக்கு காணிக்கை செலுத்துவர். தசரா விழாவில் ஆபாச நடனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் குத்துப்பாடல்கள் இடம் பெறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன் நேற்று விசரனைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் திலக்குமார், அரசு வக்கீல் வீரேந்திரன் ஆகியோர் ஆஜராகி, ‘‘கடந்தாண்டைப்போலவே இந்த ஆண்டு திருவிழாவின் போதும் நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படும். ஆபாச நடனம், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெறாமல் தடுக்கப்படும்’’ என்றனர். இதையடுத்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

The post குலசை தசரா விழா ஆபாச நடனத்தை தடுக்க நடவடிக்கை: ஐகோர்ட்டில் அரசு உறுதி appeared first on Dinakaran.

Tags : Kulasai Dussehra festival ,Govt ,ICourt ,Madurai ,Tiruchendur, Tuticorin district ,Court of Appeal ,Tiruchendur ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை...