×

4 பேர் கொலையில் வாலிபர் கைது: 2 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்

திருப்பூர்: பாஜ கிளை நிர்வாகி உள்பட குடும்பத்தினர் 4 பேரை கொலை செய்த கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், 2 பேரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(47). இவர் தவிடு, புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இவரது தம்பி மோகன்ராஜ் பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து பாஜ கிளைத்தலைவராக இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் அருகே 3 பேர் கொண்ட கும்பல் மது குடித்துள்ளனர். இதனை செந்தில்குமார் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செந்தில்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றது.

அலறல் சப்தம் கேட்டு வந்து அவரது தம்பி மோகன்ராஜ்(46) மற்றும் மோகன்ராஜின் தாய் புஷ்பவதி(62), செந்தில்குமாரின் சித்தி ரத்தினாம்பாள்(58) ஆகியோரையும் அக்கும்பல் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை அமைத்துள்ளனர். போலீசார் விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டது ஏற்கனவே செந்தில்குமாரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்த நெல்லையை சேர்ந்த வெங்கடேஷ் என்கிற செல்வம்(27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வெங்கடேஷ், செந்தில்குமாரின் தவிடு, புண்ணாக்கு நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.

டிரைவராக வேலைக்கு சேரும் முன் வெங்கடேஷ் கள்ளக்கிணறு தண்ணீர்பந்தல் பகுதியில் கோழிக்கடை வைத்திருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் செந்தில்குமார் வெங்கடேஷை வேலையை விட்டு நீக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ்,செந்தில்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நேற்று இரவு, செந்தில்குமாருக்கு சொந்தமான வீடு அருகே வெங்கடேஷ், மற்றும் அவரது நண்பர்களான திருச்சியை சேர்ந்த செல்லமுத்து (24), தேனியை சேர்ந்த சோனை முத்தையா (22) ஆகிய 3 பேரும் சேர்ந்து மது குடித்தனர்.

அப்போது அதை செந்தில்குமார் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து வெங்கடேசையும் அதை தடுக்க வந்த மோகன்ராஜ், புஷ்பவதி, ரத்தினம் ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடினர். இதற்கிடையே திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் பதுங்கியிருந்த செல்லமுத்துவை இன்று காலை கைது செய்துள்ளோம். மேலும் வெங்கடேஷ், சோனை முத்தையாவை தேடி வருகின்றோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

The post 4 பேர் கொலையில் வாலிபர் கைது: 2 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Waliber ,Thiruppur ,Baja ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...