
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 மகள்களின் கழுத்தை அறுத்து தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா அருகே உள்ள ராமபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (42). அவருக்கு மனைவியும், 13, 10, 7 வயதில் 3 மகள்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஜோமோனின் மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு தனது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் ஜோமோன் 3 மகள்களுடன் வசித்து வந்தார். இதற்கிடையே நேற்று இரவு வழக்கம்போல 4 பேரும் தூங்கச் சென்றனர். தொடர்ந்து இன்று அதிகாலை ஜோமோனின் வீட்டில் இருந்து குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டது. உடனே பக்கத்து வீட்டினர் விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது 3 பேரும் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இது குறித்து ராமபுரம் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் 3 பேரையும் மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 7 வயது சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஜோமோன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கேரளாவில் இன்று அதிகாலை பயங்கரம்: 3 மகள்களின் கழுத்தை அறுத்து தந்தை தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.