×

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்: இளம்பெண்ணின் தம்பி குத்திக்கொலை

திருமலை: காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் தம்பியை குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் எல்.பி. நகர் ஆர்டிசி காலனியில் வசித்து வருபவர் சங்கவி (25). ஹோமியோபதி மருத்துவம் படித்து வருகிறார். இவரது தம்பி பிருத்வி (23). பி.டெக். முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். ராமந்தாபூரை சேர்ந்த சிவக்குமார் (27) என்பவர் சங்கவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சிவக்குமார் பலமுறை தனது காதலை சங்கவியிடம் கூறியுள்ளார். ஆனால் சங்கவி காதலை ஏற்க மறுத்தாராம்.

இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் சங்கவி, பிருத்வி இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த சிவக்குமார், சங்கவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி தகராறு செய்துள்ளார். இதை பார்த்த பிருத்வி, சிவக்குமாரை கண்டித்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சிவக்குமார் தான் எடுத்து வந்த கத்தியால் பிருத்வியை சரமாரியாக குத்தியுள்ளார். இதை தடுக்க முயன்ற சங்கவியையும் கத்தியால் தாக்கியுள்ளார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், சிவக்குமாரை பிடித்து ஒரு அறையில் தள்ளி பூட்டினர்.

இதுகுறித்து ஐதராபாத் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த சங்கவி, பிருத்வி இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பிருத்வி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சங்கவி மேல்சிகிச்சைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அறையில் அடைக்கப்பட்டிருந்த சிவக்குமாரை மீட்டு விசாரித்தனர். இதையடுத்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்: இளம்பெண்ணின் தம்பி குத்திக்கொலை appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Telangana ,
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு