×

கன்டெய்னர் லாரியில் பயங்கர தீ: ஒரகடம் அருகே பல லட்சம் மதிப்புள்ள பைக்குகள் எரிந்து நாசம்

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே பிரபல நிறுவன இருசக்கர வாகனங்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இருசக்கரவாகன உற்பத்தி ஆலையில் 80-க்கும் மேற்பட்ட பைக்குகளை ஜார்கண்ட் எடுத்து சென்றபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காரணிதாங்களின் ஏற்பட்ட தீவிபத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்த பைக்குகளில் 20பைக் தீயில் எரிந்து சேதமானது. ஒரகடம் அருகே நேற்றிரவு புதிதாக தயாரிக்கப்பட்ட புல்லட் ரக பைக்குகளை ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பல லட்சம் மதிப்புள்ள புல்லட் பைக்குகள் எரிந்து நாசமாகி விட்டன. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் ராயல் என்பீல்டு புல்லட் பைக் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு கிளாசிக் 350, ஹண்டர் 350 உள்பட பல்வேறு ரகங்களில் புல்லட் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிமாநிலங்களுக்கு கன்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், இத்தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள 80க்கும் மேற்பட்ட பல்வேறு ரகங்களை சேர்ந்த புதிய புல்லட் பைக்குகளை ஏற்றிக்கொண்டு, நேற்றிரவு ஒரு கன்டெய்னர் லாரி ஜார்கண்ட் மாநிலத்துக்கு புறப்பட்டது. இந்த கன்டெய்னர் லாரி வண்டலூர்-வாலாஜாபாத் சாலை வழியே சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி ஒரகடம் அருகே காரணிதாங்கல் பகுதியில் வந்தபோது, கன்டெய்னர் லாரி திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. பின்னர் லாரியின் பின்பக்கத்திலும் தீ பரவி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புதிய ரக புல்லட் பைக்குகளிலும் தீப்பிடித்து எரிந்தது. இதை கண்டதும் டிரைவர் லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு, ஒரகடம் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, கன்டெய்னர் லாரியில் பரவியிருந்த தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். எனினும், லாரியில் இருந்த 20க்கும் மேற்பட்ட புதிய புல்லட் பைக்குகள் மற்றும் லாரி முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. பல பைக்குகள் பலத்த சேதமடைந்தன.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இப்புகாரின்பேரில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், கன்டெய்னர் லாரியின் பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

The post கன்டெய்னர் லாரியில் பயங்கர தீ: ஒரகடம் அருகே பல லட்சம் மதிப்புள்ள பைக்குகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Oragadam ,Sriperumbudur ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED தைவான் நாட்டை சேர்ந்தவர் மர்ம சாவு