×

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்தி அதிபர் ஆட்சியை கொண்டுவர மோடி சதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் அதிபராக மோடி முயற்சிக்கிறார் என்றும், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் அதிமுக தான் பலிகடா ஆகும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ந.மனோகரன் மகன் மகேஷ்குமார்- க.ரம்யா ஆகியோர் திருமணம் சென்னையில் நேற்று நடந்தது. திருமணத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சட்டமன்றத்தில் தேர்தல் நடந்தபோது தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வோடு நீங்கள் எல்லாம் ஒரு சிறப்பான வெற்றியை நம்முடைய கூட்டணிக்கு ஏற்படுத்திக் கொடுத்தீர்களோ, அதே போல் இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு ஒரு அவசியம் ஏற்பட்டிருக்கிறது. நான் பலமுறை சொல்லி இருக்கிறேன், யார் பிரதமராக வரவேண்டும், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதல்ல; யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் நம்முடைய லட்சியமாக-நோக்கமாக இருக்க வேண்டும். இந்தியா என்று சொன்னாலே இன்றைக்கு நிறைய பேருக்கு பயம் உண்டாகிவிட்டது. அதிலும் பாஜ கட்சிக்கு பெரும் அச்சமே ஏற்பட்டிருக்கிறது. இந்தியா என்ற பெயரைச் சொல்வதற்கே கூச்சப்படுகிறார்கள், அச்சப்படுகிறார்கள்.

இந்தியா கூட்டணி அமைந்து முதல் கூட்டம் பீகார் மாநிலத்தில் நடந்தது. மும்பையில் மூன்றாவது கூட்டத்தை நடத்தி, கூட்டங்கள் எப்படி செயல்பட வேண்டும், அப்படி செயல்படுவதற்கு என்னென்ன அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும், தேர்தல் களத்தில் நாம் எப்படி ஈடுபட வேண்டும், பிரசாரத்தை எப்படி நடத்த வேண்டும், எப்படி எல்லாம் நம்முடைய பணி அமைந்திட வேண்டும் என்பதற்காக அதற்கென்று சில குழுக்கள் எல்லாம்கூட அமைக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம்.
இதையெல்லாம் பார்த்து அஞ்சி நடுங்கிய பாஜ, ஒரே நாடு – ஒரே தேர்தலை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறார்கள்.

அந்தக் குழுவிற்கு யார் தலைவர்? இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி. இந்திய நாட்டின் ஜனாதிபதி என்பவர் பொதுவானவர். பதவியில் இருந்து விலகினாலும், அவர் அரசியலுக்கு வரக்கூடாது அல்லது அரசியல் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னையிலும் தலையிடுவது நியாயம் கிடையாது. அதுதான் மரபு. அவர் ஒரு பொதுவானவராக மாறிவிடுகிறார். ஆனால் அதை எல்லாம் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி, இவர்கள் சொல்வதை அவர் கேட்பார் என்பதற்காக அவரைப் போட்டு, அதற்குப் பிறகு அதில் சில உறுப்பினர்களைப் போட்டிருக்கிறார்கள். அந்த உறுப்பினர்களிலாவது எல்லா கட்சியும் கலந்து, கேட்டு போட்டார்களா.

அதுவும் கிடையாது. திமுக இன்றைக்கு நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. திமுகவின் பிரதிநிதிகள் இருக்கிறார்களா என்றால் கிடையாது. எனவே தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பேரை போட்டு, அவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சர்வாதிகாரத்தோடு அந்த கமிட்டியை நியமித்து ஒரு சதித்திட்டத்தை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த சட்டம் நிறைவேறினால், திமுக மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. எல்லாம் ‘ஒன்மேன் ஷோ’ ஆகிவிடும். ஒரே நாடு-ஒரே தலைவர், ‘அதிபர்’ என்று அவரே அறிவித்து விடலாம். எனவே தேர்தலே கிடையாது. ஒரே நேரத்தில் ஒரே தேர்தல்தான் வைக்கப் போகிறோம் என்று சொல்கிறார்கள்.

2021ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடந்து, நாம் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடம் ஆகிறது. இன்னும் இரண்டரை வருடம் இருக்கிறது. எனவே நாடாளுமன்ற தேர்தல் வருகிறபோது, ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றால் இந்த ஆட்சியைக் கலைத்து விடுவீர்களா? நாம் மட்டுமா, பக்கத்தில் இருக்கும் கேரள மாநிலம். அதேபோல மேற்குவங்கம். அங்கெல்லாம் கலைத்துவிடுவீர்களா? அவர்களுக்கெல்லாம் இன்னும் இரண்டரை வருடத்திற்கு மேல் ஆட்சி இருக்கிறது. ஏன் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கர்நாடக மாநிலம். அங்கு 40 சதவீதம் ஊழல் என்ற ஒரு சிறப்புப் பெயர் எடுத்து, பாஜக, படுதோல்வி அடைந்து, அங்கு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்திருக்கிறது.

எனவே அந்த ஆட்சியைக் கலைத்து விடுவீர்களா? சரி, அதுதான் போகட்டும். ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கிறீர்கள். அப்படி நாடாளுமன்றத்தோடு சட்டமன்றங்களுக்கும் தேர்தல் வைத்து, எங்காவது ஒரு மாநிலத்தில் மெஜாரிட்டி வராமல் போய் விட்டது என்றால், ஆட்சியை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது என்றால் அப்போது என்ன செய்வீர்கள்? மறுபடியும் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரும்வரை அந்தத் தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி ஆட்சி நடத்தப் போகிறீர்களா? இப்படி ஒரு அசிங்கமான, கேவலமான ஒரு சதித் திட்டத்தைத் தீட்டி, அதிபராகத் தான் இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைக்கு அந்த முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்களே தவிர நாட்டைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

தேர்தல் செலவை மிச்சப்படுத்த வேண்டும், குறைக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். நீங்கள் தேர்தல் செலவைக் குறைக்கிறீர்களோ, இல்லையோ – நீங்கள் கொள்ளை அடிப்பதை முதலில் குறையுங்கள். சி.ஏ.ஜி. ரிப்போர்ட் என்ன கொடுத்திருக்கிறது? 7.5 லட்சம் கோடி முறைகேடு. நெடுஞ்சாலை போட்டதில், அதே நேரத்தில் டோல்கேட் வசூலில்-இப்படி பல நிலைகளில் கோடி கோடியாகக் கொள்ளை அடித்து, அதுவும் ஆதாரங்களோடு சி.ஏ.ஜி.அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதைப் பற்றி கவலைப்படாமல், அதற்கு இதுவரை பதில் சொல்ல முடியாத நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார் என்று சொன்னால், இப்படிப்பட்ட கொடுமையான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழியும், சபதமும் இந்தியாவைக் காப்பாற்ற நாம் இன்றைக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதே. இவ்வாறு அவர் பேசினார்.

*அதிமுக தான் பலிகடா ஆகும்
இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, ஆளுங்கட்சியாக இருந்தபோது ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை எதிர்த்தார்கள். இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிறபோது, அதே அதிமுக அதை ஆதரிக்கிறது. அதிமுக ஆதரிப்பதை பார்க்கும்போது என்ன தோன்றுகிறது என்றால், பலிகடா ஆக்கப்பட்டது தெரிகிறது. தாம் பலிகடா ஆக்கப்பட்டது ஆட்டுக்கு தெரியாது. அதுபோல அதிமுகவும் பலிகடா ஆகப்போகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்தி அதிபர் ஆட்சியை கொண்டுவர மோடி சதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,President ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,CM ,
× RELATED ஜெகன்மோகனை ரிமோட் கன்ட்ரோல் மூலம்...