×

காசு, பிரியாணி கொடுத்தாலும் ஒரு தொகுதி கூட கிடைக்காது அண்ணாமலை படுவேஸ்ட்: எஸ்.வி.சேகர் ‘கலாய்’

கோபி: அண்ணாமலை மாநில தலைவராக தொடர்ந்து, அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் தமிழகத்தில் பாஜ ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்று எஸ்.வி. சேகர் கூறினார். முன்னாள் எம்எல்ஏவும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது இனிமேல்தான் தெரிய வரும். அண்ணாமலை, பிராமணர்களுக்கு எதிரான அனைத்து விஷயங்களும் பாஜவில் இருந்து கொண்டு பண்ணுகிறார்.

அண்ணாமலை இருக்கும் வரை அதிமுக கூட்டணி உறுதியே ஆகாது. ஒருவேளை தமிழ்நாட்டில் பாஜ தலைவராக அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் தமிழகத்தில் பாஜ ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை. காசு கொடுத்து பிரியாணி கொடுத்து 300 பேர் பஸ் ஸ்டாண்ட் வரை நடப்பதால் என்ன மாற்றம் நடக்கும்? அண்ணாமலை தலைமையிலான பாஜவில் வேலை செய்ய மாட்டேன்னு சொன்னேன். இது குறித்து மோடி கேட்கட்டும்.

அதற்கு நான் பதில் கூறுகிறேன். அண்ணாமலை போன்றவர்கள் தலைமையில் தனித்து இயங்குவது படுவேஸ்ட். அண்ணாமலை தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியாது. அண்ணாமலையும், சீமானும் போட்டியிட்டால் அண்ணாமலையைவிட சீமான் அதிக வாக்குகள் பெறுவார். இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்னுடைய நல்ல நண்பர். பள்ளியில் காலை சிற்றுண்டி போடுவது மிகச்சிறந்த திட்டம். இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

The post காசு, பிரியாணி கொடுத்தாலும் ஒரு தொகுதி கூட கிடைக்காது அண்ணாமலை படுவேஸ்ட்: எஸ்.வி.சேகர் ‘கலாய்’ appeared first on Dinakaran.

Tags : Baduwaste ,SV Shekhar 'Kalai ,Gobi ,Annamalai ,BJP ,Tamil Nadu ,AIADMK ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு