×

நக்சல் சித்தாந்தத்தால் ஏமாற்றமே மிச்சம்; சட்டீஸ்கரில் 8 நக்சல்கள் சரண்: தேடுதல் வேட்டையில் 4 பேர் கைது

தண்டேவாடா: சட்டீஸ்கரில் 8 நக்சலைட்கள் சரணடைந்த நிலையில், தேடுதல் வேட்டையில் 4 நக்சலைட்கள் கைது செய்யப்பட்டனர். சட்டீஸ்கரில் பூபேஷ் பாகேல் தலைமையிலான அரசு நக்சலைட்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக ஏராளமான நக்சல்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தண்டோவாடா, கட்டேகல்யாண் ஆகிய பகுதிகளில் சாலைகளை தோண்டி நாசப்படுத்துதல் குழிகளை வெட்டுதல், நக்சல் ஆதரவு சுவரொட்டிகள் ஒட்டுதல், பதாகைகள் வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்த நக்சல்களை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் கட்டேகல்யாண் பகுதியில் இயங்கி வந்த நக்சல்கள் 8 பேர் தண்டேவாடா காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்களில் ஒருவர் வெற்று நக்சல் சித்தாந்தங்களால் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அரன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொடாலி, ககாடி, கோண்டேராஸ் கிராமங்களில் நக்சலைட்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தப்பி ஓட முயன்ற 4 நக்சலைட்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் அரன்பூர் பகுதியில் கடந்த ஆண்டு பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு, வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.

The post நக்சல் சித்தாந்தத்தால் ஏமாற்றமே மிச்சம்; சட்டீஸ்கரில் 8 நக்சல்கள் சரண்: தேடுதல் வேட்டையில் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Naxal ,Chhattisgarh ,Thandewada ,Naxalites ,Bhupesh Bagel ,Naxals ,Dinakaran ,
× RELATED சட்டீஸ்கரில் நக்சல் சுட்டு கொலை