×

தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோர்கள் ‘மினி ஜவுளி பூங்கா’ அமைக்க ஆர்வம்: 100 பூங்காக்களை அமைக்க இலக்கு

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் ஜவுளித்துறையில் 3வது இடத்தில் அங்கம் வகிக்கிறது. குறிப்பாக, சென்னை, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, சேலம், விருதுநகர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வரக்கூடிய 2030ம் ஆண்டிக்குள் ஜவுளி துறையில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காக கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களையும், அதற்கான முன் முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதன்படி, மாநிலத்திற்கான புதிய ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கையை அரசு வகுத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஏற்றுமதியினை அதிகரிக்க கரூர், திருப்பூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் ஏற்றுமதி மையங்களை அரசு உருவாக்கி வருகின்றன.
இந்தியாவின் ஜவுளி தளமாக தமிழகத்தை நிலைநிறுத்தவும், மாநிலத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து, உற்பத்தி நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் கடந்த 2015ம் ஆண்டு முதல் ‘‘மினி ஜவுளி பூங்கா’’ திட்டம் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, 10 உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து 10 ஏக்கர் பரப்பளவில் சிறிய வகையான ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என வரைமுறைகள் வகுக்கப்பட்டன. இதன் பிறகு, புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தொழில்முனைவோர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்கள் திருத்தம் செய்து வடிவமைக்கப்பட்டன.

அதிகளவில் மினி ஜவுளி பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு அரசு தரப்பில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் மினி ஜவுளி பூங்கா அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்த பட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உட்கட்டமைப்பு வசதிகள், பொது பயன்பாட்டிற்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படும் என்ற விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. இதுகுறித்து ஜவுளித்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளி தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களை சேர்த்து கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி அரசாணை ஒன்றினை வெளியிட்டிருந்தோம்.

இந்த மினி ஜவுளி பூங்கா அமைக்க சாலை வசதி, குடிநீர் வசதி, விடுதி போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்த மட்டும் அரசின் மானியத்தை செலவு செய்ய வேண்டும் என முன்பு இருந்தது. தற்போது புதிய அரசின் பொறுப்பேற்ற பிறகு இத்திட்டத்தில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும், மானியத்துடன் இயந்திரங்களும் நிறுவுவதற்கான திட்டங்களும் உள்ளன. அதேபோல, மினி ஜவுளி பூங்கா அமைக்க விருப்பம் தெரிவிக்கும் தொழில் முனைவோர்கள் ரத்த சொந்தமாக இருக்க கூடாது என்பது விதிகளில் உள்ளது. ஏனெனில் மற்றவர்களுக்கும் இந்த வாய்ப்புகளை கொண்டு செல்லும் வகையில் அதுபோல அரசு திட்டமிட்டுள்ளது. எங்களின் இலக்காக 100 பூங்காக்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம். இது முதல்வரின் கனவு திட்டமாகும். அதனை நிறைவேற்றும் வண்ணம் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக விழிப்புணர்வு இத்திட்டத்திற்கு ஏற்படுத்தபட்டு விண்ணப்பங்கள் தற்போது குவிந்து வருகின்றன. அதன்படி, மினி ஜவுளி பூங்கா அமைக்க தற்போது திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுக்காவில் உள்ள நெடியம் கிராமத்தில் திருப்பதி மினி ஜவுளி பூங்கா அமைவதற்கான ஏற்பாடுகள் முடிந்து அவர்களுக்கு ரூ.2.50 கோடியில் அரசு மானியமும் அளிக்க அரசு சம்மந்தம் தெரிவித்துள்ளது.

இதுபோல, பல தகுதி வாய்ந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகளை ஜவுளித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். அதேபோல, இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவடையும் பட்சத்தில், தரமான ஜவுளிகளை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்வதுடன், ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, ஜவுளி பூங்கா திட்டம் செயல்பாட்டு வந்தால், தொழில் வளர்ச்சி அடையும், அண்டை நாடுகளுடன் போட்டி போட்டு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளும் உருவாகும். அதேபோல, சிறு, குறு தொழில் துறையினர் பயனடைவதுடன், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். எனவே, சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை அனைத்து மாவட்டங்களிலும் பயன்படுத்தி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியினை மேம்படுத்திட தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோர்கள் ‘மினி ஜவுளி பூங்கா’ அமைக்க ஆர்வம்: 100 பூங்காக்களை அமைக்க இலக்கு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Chennai ,Tirunelveli ,Madurai ,Thoothukudi ,Salem ,Virudhunagar ,Tamilnadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...