×

பட்டுக்கோட்டை தேங்காய், விருமாங்குடி அச்சுவெல்லம் ராஜகிரி வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்: தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை, பேராவூரணியில் விளையும் தேங்காய், விருமாங்குடி அச்சுவெல்லம், ராஜகிரி வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் செயற்குழு கூட்டம் நேற்று காலை தஞ்சாவூரில் மாநில தலைவர் முகமது இப்ராஹிம்தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரியாஜ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அவைத்தலைவர் ஷேக்தாவூது, மாவட்ட அமைப்பாளர் உமர், மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட பொருளாளர் பழனிசாமி, மாவட்ட துணைச்செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் குலாம் தஸ்ணீர், முகமது வகிமன்சூர், ராஜ்முகமது, மணிகண்டன், முகமதுதர்வேஸ், அரவிந்து மகளிரணி பர்வினா மற்றும் மாவட்ட வட்டார ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தஞ்சாவூர், திருவாரூர். நாகை மாவட்டத்தில் 15 லட்சம் ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் தண்ணீரின்றி அழிந்து விட்டது. சம்பா சாகுபடி செய்வதா அல்லது அதை கைவிடுவதா என்ற கவலையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கர்நாடகா அரசும் தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் ஏமாற்றி வருகிறது. எனவே காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைத்து விட்டு அதன் தலைவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். தமிழக விவசாயிகளை காப்பாற்ற தமிழக முதல்வர் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் விவசாயிகள் சங்க தலைவர்கள் அனைத்தும் கட்சி தலைவர்களுடன் புதுடெல்லி சென்று பாராளுமன்றம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும். பட்டுக்கோட்டை, பேராவூரணியில் விளையும் தேங்காய், விருமாங்குடி அச்சுவெல்லம், ராஜகிரி வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும். விவசாயிகளை காப்பாற்றி அவர்களின் விளை பொருள்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்து உலக அரங்கில் தேங்காய் அச்சு வெல்லம் வெற்றிலை வியாபாரத்தை கொண்டு செல்ல வேண்டும். அரியலூர், தஞ்சாவூர் மாவட்டத்தை இணைக்கும் மேலராமநல்லூர் கொள்ளிடத்தில் ஏற்கனவே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு உள்ளது. வருகிறது. தென்புறம் உள்ள தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் குடிக்காடு கருப்பூர் கொள்ளிடத்தில் உடனடியாக உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும். திருவையாறு, அய்யம்பேட்டையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் தஞ்சாவூர் ஒன்றிய தலைவர் ராஜ் நன்றி கூறினார்.

 

The post பட்டுக்கோட்டை தேங்காய், விருமாங்குடி அச்சுவெல்லம் ராஜகிரி வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்: தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Pattukottai ,Tamil Nadu Poor Farmers Association ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் 4,021...