×

மகள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக புகார்; முன்னாள் டிஜிபி திலகவதியின் மாஜி மருமகளுக்கு முன்ஜாமீன்: சென்ைன உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மகள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பான வழக்கில் ஓய்வுபெற்ற டிஜிபி திலகவதியின் முன்னாள் மருமகளுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் பிரபு திலக் மற்றும் சுருதி ஆகியோருக்கு கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியாக வாழும் நிலையில், இரு குழந்தைகளும் தந்தையான பிரபு திலக்கின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி, தாய் சுருதி வீட்டில் இருந்து தனது ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வரச் சென்ற மகளை, சுருதி திட்டியதாகவும், சுருதியின் சகோதரர் விஜய் ஆனந்த் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும், பிரபு திலக் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சுருதி மற்றும் விஜய் ஆனந்த் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி சுருதியும், அவரது சகோதரர் விஜய் ஆனந்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டீக்காராமன், மகள் மீதான பாலியல் தாக்குதல் குறித்து புகார் தெரிவிக்காத சுருதி மீதான போக்சோ குற்றச்சாட்டுக்களுக்கு அதிகபட்சம் 6 ஆறு மாதங்கள் மட்டுமே தண்டனை விதிக்க முடியும் எனக் கூறி அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அவர் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோவில், புகாரில் குறிப்பிட்டுள்ளபடி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்று விஜய் ஆனந்த் தரப்பில் கூறப்பட்டாலும், அதுகுறித்து தற்போதைய நிலையில் எந்த ஆய்வும் மேற்கொள்ள முடியாது எனக் கூறி அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று தெரிவித்து விஜய் ஆனந்தின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post மகள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக புகார்; முன்னாள் டிஜிபி திலகவதியின் மாஜி மருமகளுக்கு முன்ஜாமீன்: சென்ைன உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGP ,Thilakavathy ,Chennai High Court ,Chennai ,Dinakaran ,
× RELATED பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்...