
சென்னை: பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரிய அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுகாதார துறையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு முன்தேதியிட்டு பணி நிரந்தரம் வழங்கி பணிமூப்பு பட்டியலை திருத்தி அமைத்து பதவி உயர்வு வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2007ம் ஆண்டு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ள நிலையில், உத்தரவு அமல்படுத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக கடந்த 2015ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுகாதாரத்துறை செயலாளர், மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அப்போது, நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும், அது சம்பந்தமான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், கடந்த 2015ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 8 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளது. ஆனாலும், உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அரசுக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தனர். 2007ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தி 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
The post 17 ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத அரசுக்கு ரூ.10,000 அபராதம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.