×

வட்டாட்சியரின் தற்காலிக பணியிடை நீக்கம் ரத்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவு

கள்ளக்குறிச்சி, செப். 2: வட்டாட்சியரின் தற்காலிக பணியிடை நீக்கத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி காலனி பகுதியில், ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்ற வலியுறுத்தி தனிநபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். அப்போது அதன் அருகில் பட்டா நிலத்தில் இருந்த 5 வீடுகள் சேதமானது. மேலும் வீட்டில் குடியிருந்த 3 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதில் அலட்சியமாக செயல்பட்டதாக தனி வட்டாட்சியர் மனோஜ்முனியனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். இந்நிலையில், தனி வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கடந்த 29ம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இதை தொடர்ந்து கடந்த 30ம் தேதி தனி வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆணையை ரத்து செய்து, கள்ளக்குறிச்சி ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியராக மனோஜ் முனியனை நியமனம் செய்து உத்தரவிட்டார்.

The post வட்டாட்சியரின் தற்காலிக பணியிடை நீக்கம் ரத்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi Collector ,Kalakurichi ,District Collector ,Kallakurichi District Rishivanthiyam ,Dinakaran ,
× RELATED கலெக்டரிடம் கோரிக்கை மனு