×

பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த விவகாரம் பாஜவை சேர்ந்த ஊராட்சி தலைவர் கைது: கவுன்சிலர் தலைமறைவு

களியக்காவிளை: பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த பாஜவை சேர்ந்த ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான பாஜ கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.  குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் தாமரேசன் (55). இவரது மனைவி சரோஜா (50). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெயன் மனைவி சபிமோள் (32) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்த்து வைக்குமாறு சபிமோள் பாஜவை சேர்ந்த மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார் மற்றும் முன்சிறை ஊராட்சி ஒன்றிய பாஜ கவுன்சிலர் சாவர்க்கர் ஆகியோரை அழைத்தார். பேச்சுவார்த்தையின்போது முன்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சாவர்க்கர் சரோஜாவின் வயிற்றில் எட்டி உதைத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து இரு தரப்பு புகார் குறித்தும் களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் முன்சிறை ஊராட்சி கவுன்சிலர் சாவர்க்கர், மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார் ஆகியோர் தலைமறைவாயினர். இந்நிலையில் நேற்று மாலை சசிகுமார் அதங்கோடு பகுதியில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் சசிகுமாரை கைது செய்து களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வந்தனர். தகவல் அறிந்து பாஜகவினர் காவல்நிலையம் முன் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தலைமறைவான பாஜ கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த விவகாரம் பாஜவை சேர்ந்த ஊராட்சி தலைவர் கைது: கவுன்சிலர் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Panchayat ,BJP ,Kaliakavilai ,
× RELATED பிரானூர் ஊராட்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை