×

பொய்களையும், அவதூறுகளையும், வெறுப்பையும் கொண்ட பாஜ ஆட்சிக்கு கவுன்ட்டவுன் ஆரம்பம்: மும்பையில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தின் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பொய்களையும் அவதூறுகளையும் வெறுப்பையும் முதலீடாக வைத்து பாஜ நடத்தி வரும் பாசிச ஆட்சியின் ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பமாகி விட்டது. இந்திய மக்கள் ஒவ்வொருவரும் இந்தியாவை காக்கிற போரில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மும்பையில் நடந்த இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: இந்தியாவை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்து தலைவர்களுக்கும் வணக்கம். பாட்னாவில் கூடும் போது 19 கட்சிகள்-பெங்களூருவில் கூடும் போது 26 கட்சிகள்-மும்பையில் கூடிய இன்று (நேற்று) 28 கட்சிகள்-என இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலிமை அடைந்து வருவதை ஊடகவியலாளர்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

எங்கே சென்றாலும்-எங்கே பேசினாலும் தன்னுடைய ஆட்சியின் சாதனைகளைச் சொல்லாமல் – எங்களைப் பற்றியே பேசி எங்கள் கூட்டணிக்கு சிறந்த ‘பப்ளிக் ரிலேஷன் ஆபீஸராக’ ‘பிரைம் மினிஸ்டரே’ செயல்பட்டு வருகிறார். இந்தியா கூட்டணியை பாப்புலர் ஆக்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 9 ஆண்டுகள் ஆட்சி செய்தும் சொல்வதற்கு சாதனைகளே இல்லாத ஆட்சி ஒன்றிய பாஜ ஆட்சி தான். சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றிப் பேசாமல் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கிறார். மோடி ஆட்சி நாளுக்குநாள் ‘unpopular’ ஆகி வருகிறது. இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் ‘popular’ ஆகி வருகிறது. இது ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கூட்டணி மட்டும் அல்ல. இந்திய நாட்டையும் 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்கான கூட்டணி.

இது கட்சிகள் தங்கள் தேவைக்காக உருவாக்கிய கூட்டணி அல்ல; மாறாக, மக்கள் விருப்பத்தால் உருவாகி இருக்கிற மகத்தான அணி. எதிர்க்கட்சிகள் ஒன்றுபட மாட்டார்களா என ஏங்கிய இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக உருவாகி இருக்கிற அணி. மராட்டிய மக்கள் இந்த அணிக்கு இன்று பரிபூரணமான ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள். இன்றைய கூட்டம், திருப்திகரமாக மட்டுமல்ல, திருப்புமுனையாகவும் அமைந்திருக்கிறது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவும், எங்கள் மீதான எதிர்பார்ப்பும் நாட்டு மக்களிடையே நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

பொய்களையும் அவதூறுகளையும் வெறுப்பையும் முதலீடாக வைத்து பாஜ நடத்தி வரும் பாசிச ஆட்சியின் ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பமாகி உள்ளது. ஒன்பது ஆண்டு கால பாஜ ஆட்சியில் ஜனநாயகத்துக்கு துளியும் மதிப்பில்லை. தற்போது அது இந்தியாவின் ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது. மக்களாட்சியில் தன்னாட்சி அமைப்புகளையும், மரபுகளையும் சிதைத்த அரசாக; தங்களுக்கு எதிரான கட்சிகளின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்த அரசாக மோடி தலைமையிலான அரசு வரலாற்றில் பதியப்படும். அதற்கு மகாராஷ்டிராவே சிறந்த சாட்சி.

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துவதும், முறைகேடாக சம்பாதித்த பணத்தைக் கொட்டி, விசாரணை அமைப்புகளை ஏவி அவர்களது ஆட்சியைக் கவிழ்ப்பதும் பாஜவின் முழுநேர தொழிலாக மாறிவிட்டது. தன்னை எதிர்ப்பவர்களே அரசியலில் இருக்கக்கூடாது என நினைப்பதும் செயல்படுவதும் சர்வாதிகாரம். இந்தியாவில் தற்போது அரசியல் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் நாடாளுமன்றத்துக்கும் மதிப்பு இல்லை, நீதிமன்றங்களுக்கும் மதிப்பில்லை. தேர்தல் ஆணையம் இந்த அரசின் தலையாட்டி பொம்மையாக ஆகிவிட்டது. இடி, சிபிஐ, ஐடி என எல்லா உயர் அமைப்புகளின் சுதந்திரத்தையும் பறித்துவிட்டு, கூட்டணிக்கு ஆள் பிடிக்கிற-அரசியல் எதிரிகளை அச்சுறுத்துகிற தங்களுக்கு விருப்பத்துக்கேற்ப செயல்படும் ஏவல் அமைப்புகளாக மாற்றிவிட்டார்கள்.

தனித்தனி கட்சிகளாக இருந்தாலும் – தாய்நாடான இந்தியாவைக் காப்பாற்றுவது ஒன்றே எங்களது இலக்கு. அரசியல் லாபங்களுக்காக நாங்கள் அணி சேரவில்லை. இந்தியாவின் இறையாண்மையை-மாண்பை-மதச்சார்பின்மையை-சமூகநீதியை-சகோதரத்துவத்தைக் காப்பாற்றுவதற்காக சேர்ந்திருக்கிறோம். அந்த லட்சியத்தை மக்கள் சக்தியோடு நாங்கள் வெல்வோம். பாஜ வீழ்த்த முடியாத சக்தி அல்ல, வெவ்வேறு மாநிலங்களில் தனித்தனியாக வீழ்த்தப்பட்ட கட்சிதான் பாஜ. மிருக பலம் எனப்படும் ‘brute majority’ இருந்தும் ஏழை, எளிய மக்களுக்கு மோடி ஆட்சியால் எந்த நன்மையும் வரவில்லை. மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. தற்போது அதிகரித்து வரும் வெறுப்பரசியல் சூழலால், சராசரி இந்திய குடிமகனின் எதிர்காலம் – அப்பாவி மக்களின் உயிருக்கும் உடைமைக்குமான பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்திய மக்கள் ஒவ்வொருவரும்-இந்தியாவை காக்கிற போரில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

* ‘மாணவி விருப்பத்தை நிறைவேற்றினேன்’
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவு: மும்பையில் என்னை சந்திக்க விரும்பிய அறிவார்ந்த, இரக்கப் பண்பு கொண்ட பிரணுஷ்கா என்ற மாணவியின் விருப்பத்தை நிறைவேற்றினேன். மணிப்பூரில் நடந்த வன்முறை இவரை போன்ற ஒரு பள்ளி மாணவியைக்கூட எவ்வாறு பாதித்துள்ளது என்பதைப் பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்த உழைக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு தெளிவான நினைவூட்டலாகும். ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற பிரணுஷ்காவின் கனவு நனவாக வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் டிவிட்டரில் கூறியுள்ளார்.

The post பொய்களையும், அவதூறுகளையும், வெறுப்பையும் கொண்ட பாஜ ஆட்சிக்கு கவுன்ட்டவுன் ஆரம்பம்: மும்பையில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தின் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Chief Minister ,M.K.Stal ,India' alliance meeting ,Mumbai. ,Chennai ,'India' alliance meeting ,Mumbai ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்களை...