×

இளம்பெண்ணை வழிமறித்து சில்மிஷம்: போதை போலீஸ்காரருக்கு தர்ம அடி

சிவகங்கை: வேலை முடிந்து இரவில் வீடு திரும்பிய இளம்பெண்ணை நடுரோட்டில் வழி மறித்து சில்மிஷத்தில் ஈடுபட்ட போதை போலீஸ்காரருக்கு, தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பிரபல மெடிக்கல் கடை உள்ளது. இக்கடையில் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவர், வீட்டிலிருந்து மெடிக்கல் கடைக்கு டூவீலரில் வந்து செல்கிறார். நேற்று இரவு கடையில் வேலை முடித்த இளம்பெண் டூவீலரில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். செல்லும் வழியில் ஒத்தக்கடை என்னும் இடத்தில் இருந்த காவல்துறை சோதனைச் சாவடியை கடந்து சென்றார். அப்போது, சோதனைச் சாவடியில் குடிபோதையில் பணியில் இருந்த 40 வயது போலீஸ்காரர் ஒருவர், இளம்பெண்ணின் பின்னால் டூவீலரில் சென்றார்.

திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், இளம்பெண்ணின் டூவீலரை திடீரென தடுத்து நிறுத்தினார். பின்னர் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டார். இதைக் கேட்ட அருகில் இருந்த கிராம மக்கள் ஓடி வந்து போதையில் இருந்த போலீஸ்காரரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த தேவகோட்டை போலீசார், பொதுமக்களிடமிருந்து போதை போலீஸ்காரரை மீட்டனர். பின்னர் இளம்பெண்ணை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து போதை போலீஸ்காரரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பிக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தேவகோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இளம்பெண்ணை வழிமறித்து சில்மிஷம்: போதை போலீஸ்காரருக்கு தர்ம அடி appeared first on Dinakaran.

Tags : Chilmisham ,Sivaganga ,Dharma ,
× RELATED சிறுமியிடம் சில்மிஷம் பாதிரியார் கைது