சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 5 பேரை, நிரந்தரம் செய்யுமாறு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 75. தற்போது 63 நீதிபதிகள் உள்ளனர். இன்னும் 12 இடங்கள் காலியாக உள்ளது. இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் நீதிபதிகள் ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர்மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
நீதிபதி நக்கீரன் 2020 அக்டோபரிலும், நீதிபதிகள் மாலா, சவுந்தர், சுந்தர்மோகன், குமரேஷ் பாபு ஆகியோர் 2022 ஜூன் மாதத்திலும் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இன்னும் 11 பேர் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வருகிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மேலும் நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஏற்கனவே இரு பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஆனால், 3 மாதங்களுக்கும் மேல் இந்த பரிந்துரை ஒன்றிய சட்ட அமைச்சகத்தில் முடிவு எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தரம் : உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை appeared first on Dinakaran.