×

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்கும் விவகாரம் தமிழக அரசு சார்பில் பதில் விளக்கம்: ஆளுநருக்கு மீண்டும் கோப்பு அனுப்பி வைப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்கும் விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் பதில் விளக்கம் அளித்து, ஆளுநருக்கு மீண்டும் கோப்புகளை அனுப்பியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கா.பாலச்சந்திரன் கடந்த 13.4.2020 முதல் பதவியில் இருந்து வந்தார். மேலும் உறுப்பினர்களாக முன்னாள் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ச.முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், க.அருள்மதி, ம.அரோக்கியராஜ் ஆகிய 4 பேர் இருந்து வந்தனர். இதில் டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து வந்த கா.பாலச்சந்திரனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதியுடன் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து, ச.முனியநாதன் டிஎன்பிஎஸ்சியின் பொறுப்பு தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் காலியாக உள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைளில் தமிழக அரசு இறங்கியது. இதைத் தொடர்ந்து புதிய தலைவர் மற்றும் 10 உறுப்பினர்களை தேர்வு செய்து ஒப்புதலுக்காக தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கோப்புகளை அனுப்பி வைத்தது. அதில் டிஎன்பிஎஸ்சி தலைவராக கடந்த ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு அனுப்பிய தலைவர், உறுப்பினர்களுக்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி சுமார் ஒரு மாதமாக கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 22ம் தேதி டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென திருப்பி அனுப்பினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்ட விளக்கங்களை கோப்பாக தயாரித்து தமிழக அரசு மீண்டும் அனுப்பியுள்ளது. அதில், இந்தப் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் யார்? எதன் அடிப்படையில் சைலேந்திர பாபு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசு மீண்டும் பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

The post டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்கும் விவகாரம் தமிழக அரசு சார்பில் பதில் விளக்கம்: ஆளுநருக்கு மீண்டும் கோப்பு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Sylendra Babu ,DNBSC ,Government of Tamil Nadu ,Chennai ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...