×

அதானி குழும முறைகேட்டில் தொடர்பா?.. சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்காதது ஏன்? .. பிரதமர் விளக்கம் தர வேண்டும்: ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி

மும்பை: மும்பையில் நடக்கும் “இந்தியா” கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அதானி குழுமம் முறைகேடு குறித்து ஒ.சி.சி.ஆர்.பி. கூட்டமைப்பு முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான ஃபைனான்சியல் டைம்ஸ், கார்டியன் போன்றவை அதானி குழும முறைகேடுகள் குறித்து விரிவான செய்தி வெளியிட்டுள்ளது. மோடிக்கு நெருக்கமான குடும்பம் அதானி குழும நிறுவனங்களில் முறைகேடாக முதலீடு செய்துள்ளது என்று சர்வதேச பத்திரிகைகள் குற்றம்சாட்டியுள்ளன.

முறைகேடாக செய்யப்பட்ட முதலீடுகள் மூலம் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்த்தப்பட்டன. இந்தியாவில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் சட்டவிரோதமாக சென்று பின்னர் முறைகேடாக அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வினோத் அதானி மட்டுமின்றி சீனாவைச் சேர்ந்த சாங் சுங் லிங்க் மற்றும் நாசர் அலி ஆகிய இருவரும் அதானி குழும முறைகேடுகளில் முக்கிய பங்காற்றி உள்ளனர். அதானி குழுமத்தில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. பிரதமருக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபர் மட்டும் இந்தியாவில் இருந்து பணத்தை வெளியே அனுப்பி பின்னர் பணத்தில் சொத்துகளை வாங்க அனுமதிக்கப்பட்டது.

அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் யாருடைய பணம்? விமான நிலையங்கள் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய கட்டமைப்புகளை நிர்வகிக்கும் அதானி நிறுவனத்தில் சீனாவைச் சேர்ந்தவர் முதலீடு செய்தது எப்படி?. சீனாவைச் சேர்ந்தவரின் முதலீட்டை இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ளும் அதானி நிறுவனத்தில் அனுமதித்தது எப்படி?. செபி அமைப்பில் இருந்து விலகியவருக்கு அதானி நிறுவனத்தில் இயக்குநர் பொறுப்பு தந்தது எப்படி?. அதானி நிறுவனத்தில் இயக்குநராக உள்ள ஒருவர் செபி அதிகாரியாக இருந்தபோது நடத்திய விசாரணை எப்படி இருந்திருக்கும்?.

எனவே புதிதாக மீண்டும் அதானி குழும முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதானி குழும முறைகேடு பற்றி செபி விசாரணை நடத்தவில்லை என்பதையே இந்த நியமனம் காட்டுகிறது. அதானியால் விசாரணையை தடுத்திருக்க முடியாது; பிரதமர் விரும்பாததால் செபி விசாரணை நடத்தவில்லை. அதானி குழுமம் பற்றி நான் பேசுவதால் பிரதமர் அச்சம் அடைந்துள்ளார். அதானியுடன் உள்ள நெருக்கம் காரணமாகவே அவரைப் பற்றி பேசினாலே பதற்றம் ஏற்படுகிறது. இந்திய பொருளாதாரத்தில் அதானி குழுமம் மட்டும் ஏன் இலவச சவாரி செய்கிறது.

அதானி குழும முறைகேடுகள் என்பது இந்தியாவின் கவுரவம் சம்பந்தப்பட்டது. அதானி விவகாரம் இந்திய பொருளாதாரம் மீதான நம்பகத்தன்மையை பாதிக்கிறது. பொருளாதார முறைகேடு என்பது தனிநபர் சார்ந்த பிரச்சினை அல்ல, ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினை. இந்திய தொழில் நிறுவனங்கள் சமநிலையில் போட்டியிடும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதானி விவகாரத்தில் பிரதமர் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?. அதானி மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்காதது ஏன்?. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்.

அதானி குழும முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். உலகளவில் இந்தியாவின் மதிப்பை உறுதி செய்யும் ஜி20 மாநாட்டுக்காக தலைவர்கள் வரும் இந்த நேரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது அவசியம். வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கத் தவறினால் ஜி20 மாநாட்டுக்கு வரும் தலைவர்கள் அது குறித்து கேள்வி எழுப்ப நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post அதானி குழும முறைகேட்டில் தொடர்பா?.. சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்காதது ஏன்? .. பிரதமர் விளக்கம் தர வேண்டும்: ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Adani ,cpi ,Raqul Gandhi ,Mumbai ,Congress ,India” Coalition Consulting Meeting ,Adani Group ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...