×

லடாக்கில் இந்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி தர முடியாது என்பதால் ‘அக்சாய் சின்’ எல்லை அருகே சுரங்கப்பாதை அமைக்கும் சீனா: செயற்கைகோள் புகைப்படத்தால் அதிர்ச்சி

புதுடெல்லி: லடாக்கில் விமானப்படை தளங்களை அமைத்து இந்தியா வலுவாக இருப்பதால், அதற்கு பதிலடி தர சர்ச்சைக்குரிய ‘அக்சாய் சின்’ பகுதியில் சீனா சுரங்கப்பாதை அமைக்கும் சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. கிழக்கு லடாக்கில் கல்வான் மோதலைத் தொடர்ந்து இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பிலும் எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை வாபஸ் பெறும் பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே, அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி புதிய வரைபடத்தை வெளியிட்ட நிலையில், அக்சாய் சின் எல்லையில் சுரங்கங்களை அமைத்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

வடக்கு லடாக்கின் டெப்சாங் சமவெளிக்கு கிழக்கே அறுபது கி.மீ தொலைவில் அமைந்துள்ள பள்ளத்தாக்கின் ஓரத்தில் தற்போது சீன ராணுவம் சுரங்கப்பாதையை அமைத்து வருகிறது. சீன வீரர்கள் தங்குவதற்கும், ஆயுதங்களை பதுக்கி வைப்பதற்கும் இந்த நிலத்தடி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. வரலாற்று ரீதியாக அக்சாய் சின் இந்தியாவுக்கு சொந்தமானது என கூறி வந்தாலும், தற்போது அந்த பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது இந்திய – சீன எல்லை கோட்டுக்கு கிழக்கே அமைந்துள்ளது. இங்கு பள்ளத்தாக்கின் இருபுறமும் இருக்கும் பாறைகள் தோண்டப்பட்டுள்ளது. குறைந்தது 11 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன என கூறப்படுகிறது.

இதுகுறித்து செயற்கைக்கோள் பட நிபுணர் டேமியன் சைமன் கூறுகையில், ‘லடாக்கில் விமானப்படை தளங்கள் அமைத்து இந்தியா அங்கு வலுவாக உள்ளது. இந்த தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் எல்லைக் கோட்டுக்கு அருகே உள்கட்டமைப்பை சீனா மேம்படுத்துகிறது. அதன் ஒருபகுதியாக சுரங்கப்பாதை மற்றும் பதுங்கு குழிகளை அமைக்கிறது’ என்றார். அதேபோல் இந்திய ட்ரோன் ஸ்டார்ட்-அப் நியூஸ்பேஸ் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் ஜோஷி கூறுகையில், ‘கால்வான் மோதலுக்குப் பிறகு, இந்திய இராணுவம் சீன எல்லையில் துருப்புகளை அதிகரித்துள்ளது.

எவ்வித தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. தற்போது எல்லையில் சீனா மலைகளை ஆக்கிரமித்து வருவதும், இந்தியாவின் பதிலடி தாக்குதல் திறனும் ஒன்றுக்கொன்று நேரடி தொடர்புடையது’ என்றார். இந்திய – சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் வரும் செப். 9, 10ம் தேதிகளில் டெல்லியில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சீனாவின் ஆக்கிரமிப்பு வரைபடம், ஆக்கிரமிப்பு விவகாரங்கள் பேசப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post லடாக்கில் இந்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி தர முடியாது என்பதால் ‘அக்சாய் சின்’ எல்லை அருகே சுரங்கப்பாதை அமைக்கும் சீனா: செயற்கைகோள் புகைப்படத்தால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : China ,Aksai Chin ,Ladakh ,New Delhi ,India ,Dinakaran ,
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன