காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 400வது நாளாக போராட்டம் நடந்தது. தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதை விரிவாக்கம் செய்வதற்கு இடவசதி இல்லாததால் 2வது சர்வதேச விமான நிலையம் கட்ட செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 இடங்களை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாம்புரம் கிராமத்தை மையப்பகுதியாக வைத்து சர்வதேச விமான நிலையம் அமைக்க 13 கிராமங்களில் 5000 ஏக்கர் விளை நிலங்கள் எடுப்பு நடைபெற போவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் அக்கிராம மக்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில்கொண்டு புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுபோல் ஒவ்வொரு கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பரந்தூர் விமான நிலைய கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்பு விவசாய நல கூட்டமைப்பு சார்பில் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடந்தது. போராட்டம் தொடங்கி 400வது நாளை எட்டி இருப்பதால், பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் நாகத்தம்மன் கோயில் முன்புகூடி கண்களில் கருப்பு துணி கட்டியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பெண்கள், சிறுவர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
The post பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு 400வது நாளாக போராட்டம் appeared first on Dinakaran.