×

அம்பத்தூர் பகுதி கடைகளில் ஹான்ஸ், குட்கா, மாவா விற்பனை: ஒரே நாளில் 58 பேர் கைது

அம்பத்தூர்: ஆவடி பகுதிகளில் ஹான்ஸ், குட்கா, மாவா விற்ற 58 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்பதை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் கடைகளில் கூல் லிப், ஹான்ஸ் போன்ற போதை பொருள் விற்பனை செய்வதை தடை செய்யும் நோக்கத்தில் அதிரடி சோதனை நேற்று நடந்தது. அந்தவகையில் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் கொரட்டூர் காவல் நிலைய பகுதியிலும், ஆவடி காவல் இணை ஆணையாளர் விஜயகுமார் ஆவடி காவல் மாவட்ட பகுதியிலும், செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் கே.எஸ்.பாலகிருஷ்ணன் மணலி காவல் சரகத்திலும், ஆவடி காவல் மாவட்ட துணை ஆணையாளர் எஸ்.ஆர்.எம்.சி காவல் சரகத்திலும் சோதனை நடத்தினர். இதில் பல கடைகளில் போதை பொருட்களான ஹான்ஸ், குட்கா, மாவா, கூல்லிப் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 58 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். போதை பொருள் விற்றதாக ஒரே நாளில் 58 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அம்பத்தூர் பகுதி கடைகளில் ஹான்ஸ், குட்கா, மாவா விற்பனை: ஒரே நாளில் 58 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Hans ,Ambatore ,Gudka ,Mawa ,Awadi ,Hambatore ,Dinakaran ,
× RELATED விருத்தாசலத்தில் 30 மூட்டை ஹான்ஸ் பறிமுதல்: 2 பேர் கைது