×

நெமிலி அருகே மூதாட்டி கொலையான நிலையில் தாக்கப்பட்ட 2 வயது குழந்தையும் சாவு: மனநலம் பாதித்த பெண்ணிடம் விசாரணை

நெமிலி: நெமிலி அருகே மூதாட்டி கொலையான நிலையில் தாக்கப்பட்ட 2 வயது குழந்தையும் பரிதாபமாக இறந்தது. இதையடுத்து இரட்டை கொலை வழக்காக மாற்றி மனநலம் பாதித்த பெண்ணிடம் போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை மதுரவாயல் புலியம்பேடு பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி செல்வி (40), மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களது மகன் புவியரசன் (23), கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து செல்வி தனது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்திற்கு கடந்த 2 வாரங்களுக்கு முன் அழைத்து வரப்பட்டு தங்க வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி செல்வியின் உறவினர்கள் சிலர் நெல் நாற்று நடவுக்காக வெளியே சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த செல்வி, அங்கிருந்த உறவினரின் 2 வயது குழந்தை வேல்முருகனை இரும்பு ராடால் சரமாரி தாக்கியுள்ளார். இதைக்கண்ட அங்கிருந்த மூதாட்டி குள்ளம்மாள் (98) தடுத்துள்ளார். அவரையும் செல்வி தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிறிது நேரத்தில் குள்ளம்மாள் இறந்தார். இதனிடையே தீவிர சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் மாற்றப்பட்ட குழந்தை வேல்முருகன், இன்று அதிகாலை இறந்தான். இதுகுறித்து நெமிலி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் இரட்டை கொலை வழக்குப்பதிவு செய்து செல்வியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் செல்வியை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

The post நெமிலி அருகே மூதாட்டி கொலையான நிலையில் தாக்கப்பட்ட 2 வயது குழந்தையும் சாவு: மனநலம் பாதித்த பெண்ணிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Saavu ,Nemili ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...