×

கடல்நீர் சாகச விளையாட்டு தொடங்கப்பட்டு முள்ளக்காடு கடற்கரை மேம்படுத்தப்படும் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

ஸ்பிக்நர், ஆக. 30: முள்ளக்காட்டில் கடல்நீர் சாகச விளையாட்டுகள் தொடங்கப்பட்டு வெளிநாட்டு கடற்கரைகளைப்போல் சுற்றுலா மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு கடற்கரை பகுதியில் கடல்நீர் சாகச விளையாட்டுகள் தொடங்குவது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: முதல்வரின் ஒப்புதலுடன் தூத்துக்குடி முள்ளக்காடு கடற்கரை பகுதியை கடல்நீர் சாகச விளையாட்டுகள் அடங்கிய சுற்றுலா தலமாக ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு ₹1.70 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்து நிபுணர்களை வைத்து எந்தெந்த சாகச விளையாட்டுகள் இங்கு கொண்டு வரலாம் என்று திட்டமிட்டு அதன் அடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தாமதமாவதற்கு காரணம் கிட்டத்தட்ட 23 ஏக்கர் நிலம் தேவைப்பட்டதுதான். தற்போது நிலம் வாங்குவதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம்.விரைவில் நிலம் வாங்கப்பட்டு வருவாய்த்துறையில் இருந்து சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்டவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்திற்கு தூத்துக்குடி வஉசி துறைமுக நிர்வாகத்திடம் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ₹45.46 லட்சம் முதற்கட்டமாக பெறப்பட்டு சாகச விளையாட்டுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்த வாரம் துவங்கப்படும். மேலும் சுற்றுலாத்துறை மூலமும் தேவையான நிதி ஒதுக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு தேவையான நிதியை தருவதற்கு முதல்வர் தயாராக உள்ளார். வெளிநாடுகள் மற்றும் கோவளம் போன்ற கடற்கரையைப்போல் தூத்துக்குடியில் முள்ளக்காடு கடற்கரையிலும் சுற்றுலா மேம்படுத்தப்படும். முதல்வர் அனைத்து துறைகளையும் முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டை 2 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் நாட்டிலேயே 2வது இடத்திற்கு உயர்த்தி உள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுலாவை மேம்படுத்தினால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் கிடைப்பதுடன் அரசுக்கும் வரி வருவாய் அதிகரிக்கும், என்றார்.ஆய்வின்போது சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சப்-கலெக்டர் கவுரவ்குமார், சுற்றுலா வளர்ச்சி கழக மதுரை மண்டல மேலாளர் டேவிட் பிரபாகரன், சுற்றுலா அலுவலர் திருவாசன், தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன், முள்ளக்காடு பஞ். தலைவர் கோபி, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மண்டல தலைவர் பாலகுருசாமி, கவுன்சிலர் விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், கருணா, மணி, ஆல்பர்ட் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post கடல்நீர் சாகச விளையாட்டு தொடங்கப்பட்டு முள்ளக்காடு கடற்கரை மேம்படுத்தப்படும் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ramachandran ,Mullakkadu ,Spigner ,Mullakkad ,
× RELATED ஐகோர்ட் தாமாக தொடர்ந்த வழக்குகள் தள்ளிவைப்பு