×

புதுப்பட்டு கிராமத்தில் நண்பரின் தாயாரை கொன்ற வாலிபர் கைது: நகைக்காக தீர்த்துக்கட்டியது அம்பலம்

திருவள்ளூர்: கடம்பத்துார் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி என்பவரின் மகன் பங்காரு (56). இவருடன் இவரது தாயாரான லட்சுமி (85) வசித்து வந்தார். பங்காருவின் தம்பி முருகன் திருநின்றவூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். அவரது தாயார் லட்சுமி தினமும் இரவு நேரத்தில் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தனியாக தூங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பங்காருவின் தம்பி முருகனுடன் சுற்றித்திரிந்த கூலித்தொழிலாளியான அசோக்குமார் (38) என்பவர் கடந்த 26ம் தேதி இரவு மூதாட்டி லட்சுமியுடன் அந்த வீட்டில் தூங்கச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மறுநாள் காலை தனது தாயார் லட்சுமி வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர் மன்னம்மாள் என்பவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது மூதாட்டி லட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த மப்பேடு போலீசார் லட்சுமியின் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மப்பேடு போலீசார் நடத்திய விசாரணையில், மூதாட்டியுடன் தங்கியிருந்த அசோக்குமார்தான் அவரை கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். நகைக்காக மூதாட்டி லட்சுமியை கொலை செய்ததாக அசோக்குமார் வாக்குமூலம் அளித்ததாக மப்பேடு போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post புதுப்பட்டு கிராமத்தில் நண்பரின் தாயாரை கொன்ற வாலிபர் கைது: நகைக்காக தீர்த்துக்கட்டியது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Pudupatta ,Ambalam ,Tiruvallur ,Bangaru ,Munusamy ,Pudupattu village ,Kadambathur ,Lakshmi ,Pudupattu ,
× RELATED திருத்தெற்றியம்பலம் பள்ளிகொண்ட பெருமாள்