×

ரூ.35 கோடி சொத்து குவிப்பு வழக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மனைவியுடன் புதுகை நீதிமன்றத்தில் ஆஜர்: செப். 26க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று மனைவியுடன் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 26ம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்தது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் சி.விஜயபாஸ்கர். முன்னாள் சுகாதார துறை அமைச்சர். அதிமுக மாவட்ட செயலாளர். விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரை வருமானத்தை மீறி சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் பேரில், விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 56 இடங்களில் சோதனை நடந்தது. இதில் ரூ.23.85 லட்சம் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகனங்களின் சான்றுகள், 19 ஹார்டு டிஸ்க்குகள் என பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து விஜயபாஸ்கர், வருமானத்தை விட அதிகமாக 53 சதவீதம், அதாவது ரூ.35 கோடியே 79 லட்சம் சொத்து குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் கடந்த மே 22ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், புதுக்கோட்டை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதோடு 10 ஆயிரம் பக்க சொத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அந்த நீதிமன்றம் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த 5ம் தேதி விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது ஆகஸ்ட் 29ம் தேதி (இன்று) விஜயபாஸ்கரையும், அவரது மனைவி ரம்யாவையும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இருவரும் இன்று புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post ரூ.35 கோடி சொத்து குவிப்பு வழக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மனைவியுடன் புதுகை நீதிமன்றத்தில் ஆஜர்: செப். 26க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : minister ,C.C. Vijayapascar ,Ajar ,Vuvava Court ,Pudukkotta ,Former ,C. Vijayapascar ,Pudukkotta Court ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...