×

ஆற்காட்டில் இருந்து வேலூருக்கு சென்ற தனியார் பஸ் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்

*அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

ஆற்காடு : ஆற்காடு நகரில் பஸ் படிக்கட்டு, ஜன்னல் மற்றும் ஏணிகளில் தொங்கியபடி வாலிபர்கள் ஆபத்தான பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பஸ்களில் விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றக்கூடாது. பஸ் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது என அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி அபராதம் விதிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அரசின் இந்த உத்தரவை மீறி பஸ்களில் அதிக அளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். இதில், பெரும்பாலான மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் நிலை உள்ளது.

இதேபோல், நேற்று ஆற்காட்டில் இருந்து வேலூருக்கு தனியார் பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் ஏற்றி செல்லப்பட்டனர். மேலும், பஸ்ஸின் 2 படிக்கட்டுகளிலும் வாலிபர்கள் தொங்கியபடி சென்றனர். அதில், ஒருவர் ஏணியில் தொங்கியபடி செல்பி எடுத்து கொண்டு சென்றது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பஸ்சில் பயணம் செய்த பொதுமக்கள் கூறுகையில், ‘இதுபோன்ற சம்பவங்கள் தினமும் நடந்து வருகிறது. இதனை பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் செக்கிங் என யாரும் கண்டுகொள்வதில்லை. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அபராதம் விதிப்பதோடு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து ஏற்படும் முன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post ஆற்காட்டில் இருந்து வேலூருக்கு சென்ற தனியார் பஸ் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் appeared first on Dinakaran.

Tags : Arkad ,Vellore ,Arkadu ,
× RELATED பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்!